"விட்ருங்க.. நான்தான் சொல்லிட்டேன்ல.. "ஷட்டப்" பண்ணுங்க".. ரஜினியின் திடீர் கோபத்துக்கு என்ன காரணம்?
ரஜினிகாந்த் மீண்டும் தன் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்
சென்னை: இதோ மீண்டும் ஒருமுறை தான் வர போவதில்லை என்பதை ரஜினிகாந்த் விளக்கி விட்டார். இந்த முறை தனது ரசிகர்கள் தன் சொல் பேச்சை கேட்கவில்லை என்பதை அவர் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
Recommended Video
ஆனால் இந்த முறை ரஜினியின் பேச்சில் ஒரு கோபம் தெறிப்பதை உணர முடிகிறது. நான் தெளிவாகச் சொல்லியும் என் பேச்சைக் கேட்காமல் திரும்பத் திரும்ப பிடிவாதம் பிடிக்கிறீர்களா என்ற கோபம் அதில் தெரிகிறது.
அதிலும் முக்கியமாக, விலகிப் போனவர்களுடன் இணைந்து கூட்டம் நடத்துகிறீர்களா என்ற ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். ரஜினி தனது ரசிகர்கள் குறித்து வருத்தப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு தனது மாவட்டச் செயலாளர்கள் காசு வாங்கிக் கொண்டு செயல்படுவதாக அவர் பலமுறை குற்றம் சாட்டி அவர்களிடம் கடுமை காட்டியவர்தான்.
வருத்தம்
ஆனால் பொது வெளியில் தனது ரசிகர்கள் குறித்து அவர் பகிரங்கமாக வருத்தத்தை பதிவு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். ஒரு உச்ச நடிகர் தனது ரசிகர்கள் தன் பேச்சைக் கேட்பதில்லை என்று வருத்தத்தைப் பதிவு செய்வது தமிழக சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்று கருத வேண்டியுள்ளது. அதை விட முக்கியமாக, ஒருவர் தனது உடல் நிலை முக்கயமில்லை என்று கூறியும் கூட வாங்க வாங்க என்று இழுத்துப் பிடித்து பிடிவாதம் பிடிவாதம் பிடிக்கும் ரசிகர்களை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்றும் தெரியவில்லை.
அறிக்கை
மீண்டும் வெளியிட்டுள்ள ரஜினியின் அறிக்கை என்பது ரஜினியை அரசியலுக்கு வாங்க என்று சொல்லும் ரசிகர்களை மட்டுமல்ல.. அவர்களை வைத்து விளையாட்டுக் காட்டத் துடிக்கும் பலருக்கும் சேர்த்துதான் என்றே எடுத்துக் கொள் வேண்டியுள்ளது.... அதேசமயம், ரஜினி ரசிகர்களை கண்டிப்பது ஏற்ககூடியதுதான்.. ஆனால் ரஜினி பெயரை இன்னமும் சொல்லி கொண்டிருப்பவர்களுக்கு ஏன் இவர் பதில் ஏதும் சொல்லாமல் இருக்கிறார்? ரசிகர்களாவது ஏதோ ஆதங்கத்தில், ஆசையில் அவரை கட்சி ஆரம்பிக்க கூப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்..
பிரவீன் காந்தி
ஆனால் எல்லாம் தெரிந்த இந்த பிரவீன் காந்திக்கு என்ன ஆயிற்று? ஒரு டைரக்டரே இப்படி பஞ்ச் வைத்து பேசி கொண்டிருந்தால், ரசிகர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? இதே பிரவீன்காந்த்தானே டிவி விவாதங்களில் ஒவ்வொருமுறையும் ரஜினிக்கு ஆதரவாக பங்கெடுத்து பேசி வருகிறார்.. அப்படி இருக்கும்போது, ரஜினியின் உடல்நிலை பற்றி தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது.. ரஜினி இவரையும் கண்டித்திருக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு.
முத்தரசன்
அதேபோல, தங்களுக்குதான் ரஜினி வாய்ஸ் தர வேண்டும் என்று, அதிமுக, பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் காத்து கிடக்கின்றன.. இதில் கமல்தான் முன்னதாகவே துண்டு போட்டு வைத்திருப்பவர்.. அவ்வளவு ஏன், கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசனே வாய்விட்டு ரஜினி ஆதரவை கேட்டுவிட்டார்.. இதில், அழகிரி கட்சி ஆரம்பித்தால் அவரும் எப்படியோ ரஜினி வாய்ஸைதான் கேட்பார்.. ஆனால், இவர்களில் ஒருவருக்குதான் ஆதரவு தரும்பட்சத்தில், யாருக்குதான் ரஜினியின் வாய்ஸ் தருவார் என்பதும் எதிர்பார்ப்புதான்..அந்த வகையில், அதற்கும் இந்த அறிக்கையில் பதில் இல்லாதது சற்று ஏமாற்றம்தான். முழுக்க முழுக்க ரசிகர்களை மனதில் வைத்துமட்டுமே அறிவுறுத்தி உள்ளார்..
ரசிகர்கள்
அப்படியென்றால், மற்ற கட்சிகள் ரஜினிக்காக காத்திருப்பதையும், ரஜினி வாய்ஸ் தர வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி கொண்டிருப்பதையும், ரஜினியே விரும்புகிறாரா? என்று தெரியவில்லை. தன்னை பற்றி பேச்சு எப்போதுமே மீடியாவில் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும், அந்த லைம் லைட்டிலேயே தன்னை பிரதிபலித்து காட்டி கொள்ள வேண்டும் என்ற உணர்வுடனேயே இருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது.. எப்படியோ, ரஜினி ரசிகர்கள் இனியாவது அமைதி காத்து தங்கள் வேலை வெட்டியை பார்ப்பார்கள் என்று நம்புவோம்!