நீட் தேர்வு: தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் தற்கொலைகள்.. ரஜினிகாந்த் மவுனம் காப்பது ஏன்?
சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக இதுவரை நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டு இருப்பதற்கு நாடு முழுவதும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது. நடிகர் சூர்யா தனது எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து இருக்கிறார். ஆனால், நடிகர் ரஜினிகாந்த் இன்று வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காதது மாணவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்து இருக்கிறது. தேர்வு நடப்பதற்கு முன்பாக தமிழகத்தில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்கலாத்தில் நீட் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவப் படிப்பின் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் பெரும்பாலும் தென்னிந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. முன்பு போல் பிளஸ் 2 தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அந்தந்த மாநிலத்தின் முடிவுக்கு மருத்துவ தேர்வை விட வேண்டும் என்பதுதான் அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி மாணவர்களின் விருப்பமும்.
முன்பு நீட் தேர்வு எழுதாமல்தான் தமிழகத்தில் உலகம் போற்றும் மருத்துவர்கள் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். மருத்துவத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழகம் நோக்கி வந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வுக்கு மத்திய ஒதுக்கீட்டில் பெரும்பாலும் வெளிமாநில மாணவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைக்கிறது. மாநில மாணவர்கள் வாய்ப்பை இழக்கின்றனர். இத்துடன் இல்லாமல், மாநில கல்வித்திட்டத்தின் கீழ் படிப்பவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. அவர்களது கற்றலை அல்லது கல்வி தரத்தை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனாலும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏற்றார்போல் கடினமான கேள்விகளை கேட்பதால் மதிப்பெண் எடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த வாரங்களில் நான்கு மாணவர்கள் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர். அரியலூர் விக்னேஷ், மதுரை ஜோதி துர்கா, கோவையைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, தருமபுரி மாணவர் ஆதித்யா தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு பெரிய அளவில் போராட்டமும் நடந்து வருகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை நடிகர் ரஜினிகாந்த் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களில் ஏன் ரஜினிகாந்த் இதுவரை எந்தக் கருத்தையும் எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, காங், விசிக எம்.பிக்கள் போராட்டம்
சிஸ்டம் சரியில்லை என்று கூறும் ரஜினிகாந்த் இதற்கும் தனது கருத்தை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை பெரிய அளவில் மக்களை பாதித்த சம்பவங்களிலும் ஒதுங்கியே இருந்த ரஜினிகாந்த் ஏன் தற்போதும் ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இன்றைய மாணவர்கள்தான் நாளைய தமிழகம் என்ற நிலையில் ஏன் ரஜினிகாந்த் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
நீட் தேர்வு ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கிறது என்று நாடே உணர்ந்து இருக்கும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சி துவக்குவதற்கு தயாராகி வரும் ரஜினிகாந்த் மவுனம் காப்பது ஏன்?எது அவரை தடுக்கிறது. இளைஞர்களின் எழுச்சி ஏற்பட வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த் அமைதி காப்பது நீட் தேர்வுக்கு சம்மதம் என்று எடுத்துக் கொள்ளப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.