நாளை மா.செக்களை சந்திக்கும் ரஜினிகாந்த் தமிழருவி மணியனை இன்று சந்தித்தது ஏன்?
சென்னை: நாளை மாவட்டச் செயலாளர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் இன்று தமிழருவி மணியனை சந்தித்த போது முதல்வர் வேட்பாளர், கட்சி அறிவிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
Recommended Video
கடந்த வாரம் வியாழக்கிழமை 3ஆவது முறையாக மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் சந்திப்பு நடத்திய ரஜினிகாந்த் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் அதி முக்கியமானது தான் ஒரு போதும் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என்பதுதான்.
ஆனால் இதை மாவட்டச் செயலாளர்கள் ஏற்கவில்லை. இதைத்தான் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி தனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
ஆலோசனை
இந்த நிலையில் ரஜினிகாந்த் நாளை 4ஆவது முறையாக ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை காலை 8 மணிக்கு ராகவேந்திர திருமண மண்டபத்தில் சந்திக்கிறார். அப்போது அவர் கட்சியின் கொடி குறித்தும் கட்சியின் பெயர் குறித்தும் ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. முன்னதாக இன்று ஆலோசகர் தமிழருவி மணியனுடன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கட்சித் தொடங்குவதே
முதல்வர் வேட்பாளர் குறித்த குழப்பம் நீடித்து வரும் நிலையில் இருவரது சந்திப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதல்வர் வேட்பாளராக தமிழருவி மணியனை இருக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டிருப்பார் என தெரிகிறது. ரஜினியை பொருத்தவரை கட்சித் தொடங்குவதே லஞ்சமில்லாத அரசை தருவதற்குத்தான்.
காந்தியவாதி
அப்படியிருக்கையில் காந்தியவாதியான தமிழருவி மணியன்தான் ரஜினியின் சாய்ஸாக இருக்கும். அவரை ரஜினி சமாதானப்படுத்தி ஒப்புக் கொள்ள வைத்திருக்கலாம். ஒரு வேளை தமிழருவியார் இதற்கு மறுப்பு தெரிவித்தால் வேறு யாரை முன்னிறுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தவும் இருவரும் சந்தித்திருக்கலாம் என தெரிகிறது. அரசியலில் மூத்தவர் என்பதால் தமிழருவி மணியன்தான் சரியான தேர்வு என ரஜினி கருதுவதாகவே தெரிகிறது.
ரசிகர்கள்
மேலும் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. செ.கு.தமிழரசன், ராதாரவி, திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கடந்த இரு தினங்கள் சந்தித்துள்ள நிலையில் தமிழருவியாரையும் ரஜினி சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாளை நிச்சயம் ஏதேனும் சூசக அறிவிப்பாவது இருக்கும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.