விஜய்க்கே மவுசு ஜாஸ்தி... ரஜினிக்கும் இதுதெரியும்.. அதான் இந்த முடிவு.. ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அதிரடி!
சென்னை: தாம் அரசியலுக்கு வரப் போவது இல்லை என்பதில் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக இருப்பதாகவும் அதனால் அவரது ஆதரவைப் பெறுவதில் பாஜக படுதீவிரமாக இருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ரஜினிகாந்தை பொறுத்தவரை அதிரடியாக தேர்தலில் இறங்க வேண்டும்.
அதாவது மாநிலம் தழுவிய தேர்தலில் இறங்க வேண்டும் என்றுதான் ரஜினிகாந்த் நினைத்தார். ஆனால் அதன் பிறகு ரஜினிகாந்த், புதிய படங்களை வெளியிட்டு இளைஞர்களை தம்மால் ஈர்க்க முடிந்திருக்கிறதா? என்பதையும் வெள்ளோட்டமாக பார்த்திருக்கிறார்.
விஜய்க்கு அதிக ஆதரவு
2017, 2018-ம் ஆண்டுகளில் இப்படியான எண்ணத்தில்தான் ரஜினி இருந்திருக்கிறார். இன்றைக்கு நீங்கள் பள்ளி, கல்லூரிகளில் போனால் ரஜினிகாந்தை விட விஜய்க்குதான் கை தட்டல் அதிகமாக கிடைக்கிறது. இந்த கள நிலவரம் நிச்சயமாக ரஜினிக்கு தெரியவந்திருக்கிறது.
கட்சிக்கான கட்டமைப்பும் இல்லை
இதை ரஜினிகாந்த் உணர்ந்து கொள்ளத்தான் இந்த காலம் தேவைப்பட்டிருக்கிறது. இதேகாலகட்டத்தில் தம்முடன் இணைந்து வரக் கூடிய அரசியல் கட்சிகளுடனும் ரஜினிகாந்த் பேசி கொண்டிருந்தார். இதில்தான் தமக்கு கட்சியை தொடங்கக் கூடிய அடிப்படை கட்டமைப்பு இல்லை என்பதை ரஜினிகாந்த் உணருகிறார்.
கொரோனாவால் ரஜினி முடிவு
ரஜினிகாந்துக்கு இந்த புரிதல் ஏற்படும் காலத்தில்தான் கொரோனா தொற்றும் பரவுகிறது. இந்த கொரோனா பரவல் இல்லாமல் இருந்தால் ரஜினிகாந்துக்கு மிகப் பெரிய தர்ம சங்கடம் இருந்திருக்கும். கொரோனா வந்ததால் ரஜினிகாந்துக்கு அது எஸ்கேப் வழியாகத்தான் இருக்கிறது. கொரோனாவை காரணம் காட்டி ஒதுங்கிவிட்டார் என்று சொல்லவில்லை. அவருக்கு உடல்நிலையில் பல பிரச்சனைகள் உள்ளன.
அரசியலுக்கு வரமாட்டார்
கொரோனா காலம் இல்லை எனில் ரஜினிகாந்தால் தெளிவான ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியாது. கொரோனா இல்லாமல் இருந்திருந்தால் என்னால் அரசியலுக்கு வர முடியாது என ரஜினிகாந்தா நிச்சயம் சொல்லி இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் அரசியலுக்கு வரவில்லை என்ற முடிவில் ரஜினிகாந்த் உறுதியாக இருக்கிறார்.
ஆதரவு கேட்கும் பாஜக
இதனால்தான் பாஜக போன்ற கட்சிகள் ரஜினிகாந்தின் ஆதரவையாவது தங்களுக்கு பெற்றுவிட முடியாதா? என பேசிவருகின்றனர். இது தொடர்பான அறிவிப்பு டிசம்பர் 12-ந் தேதிக்கு முன்னதாக வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு ஆர்.கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.