ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் பதவியை காப்பாத்த போய்ட்டாங்க.. பிரபு குறித்து தினகரன் கலகல பதில்
Recommended Video
சென்னை: எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே அதிமுகவுக்கு போய் இருப்பதாகவும் அவர்கள் யார் சொல்லி இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்பது தனக்கு தெரியும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சட்டசபை வளாகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ரத்தினசபாதி, கலைச்செல்வன் ஆகியோர் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தது பற்றி கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த டிடிவி தினகரன், கடந்த லோக்சபா தேர்தல் முடிந்த மறுநாளே அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை பதிவு செய்வதற்காக கூட்டம் போட்டோம். அப்போது ரத்தினசபாதி, கலைச்செல்வன் ஆகிய இரண்டு பேருமே வந்தாங்க. அவர்களிடம் நான். நீங்கள் எம்எல்ஏவாக இருப்பதால் கையெழுத்திட வேண்டாம் என்று கூறினேன். இந்தக் கட்சியில் இணைந்தால் உங்கள் பதவி போய்விடும். நீங்கள் தனித்து நின்று செயல்படுங்கள் என்றேன்.
ஆனால் சகோதரர்கள் ரத்தினசபாதியும் கலைச்செல்வனும் டிவியில் அண்மையில் பேசியதை பார்த்தேன். யார் சொல்லி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியும்.. போனவாரம் என்ன பேசினார்கள் என்பது உங்களுக்கே தெரியும். விருத்தாசலம் தொகுதிக்கு மக்களை சந்திக்க நான்சென்ற போது கலைச்செல்வன் எப்படி பேசினார் என்பது எனக்கு தெரியும். . புதுக்கோட்டையில் நான் பங்கேற்ற கூட்டத்திலேயே ரத்தினசபாபதி எப்படி பேசியிருக்கிறார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். உங்களுக்கும் தெரியும். பதவியைக் காப்பாற்றிக்கொள்ள அதிமுகவில் சேர்ந்திருக்கிறார்கள்.. அதனால் தவறு இல்லை.
பிரபு என்னுடன் இருப்பாரா என்பது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். கலைச்செல்வனும் ரத்னசாபாபதியும் பதவியை காப்பாற்ற சென்றுள்ளார்கள். அதனால் நான் அதிமுக அரசை கலைக்க முயல்வதாக அவர்கள் பேசியதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பொதுமக்கள் மத்தியில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வீழ்ச்சியடைந்தால் அதில் உள்ள நிர்வாகிகள் எல்லாம் போகிறார்கள் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கத்தான் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் முயற்சி செய்கின்றன. தோல்வி ஒரு இயக்கத்தைச் சரித்துவிடும் என்று யாராவது நினைத்தால் இது உண்மை இல்லை என்பதை காலம் நிரூபிக்கும் '' இவ்வாறு தனது பேட்டியின் போது குறிப்பிட்டார்.