சர்கார் படத்திற்கு ஆளும் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்க, இந்த காட்சிகள்தான் காரணம்?
Recommended Video
சென்னை: சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய, காட்சிகளை நீக்க வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
குறிப்பாக, அரசு இலவசமாக கொடுத்த பொருட்களை மக்கள் தீக்கிரையாக்குவது போன்ற காட்சியை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மறுபக்கம், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, சர்கார் படத்து கதையை விமர்சனம் செய்துள்ளார்.
இப்படி, ஆள்வோரை கோபப்படுத்தும் அளவுக்கு சர்கார் திரைப்படத்தில் அப்படி என்னதான் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
[சர்காருக்கு போட்டி போட்டு விளம்பரம் செய்யும் பாஜக - அதிமுக.. நல்லா பண்ணுறீங்க பப்ளிசிட்டி!]
குறியீடுகள்
ஆள்வோரை கோபப்படுத்தும் அளவுக்கு பல குறியீடுகள் மறைமுகமாக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில், போலீஸ் தடியடி காட்சி, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் தற்கொலை செய்த சம்பவத்தை நினைவுபடுத்தும் காட்சிகள் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
கலெக்டர் அலுவலகம்
"கலெக்டர் அலுவலகத்தில் ஒரு குடும்பம் தீக்குளித்ததும், தீயணைப்பு வண்டியை கொண்டு வந்து நிறுத்தினார்கள். தீக்குளிக்க கூடாது என நினைத்திருந்தால் கந்துவட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பார்கள். இங்கே (கலெக்டர் அலுவலகத்தில்) தீக்குளித்துவிட கூடாது என்று நினைத்ததால் தீயணைப்பு வண்டியை நிறுத்தினார்கள்" என படத்தில் ஒரு வசனம் வருகிறது.
துறைவாரி குற்றச்சாட்டு
தீக்குளிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தப்பி பிழைத்த குழந்தையின் முகம் சிதைந்து காணப்படும். அதை பார்க்கும் விஜய் கதாப்பாத்திரம், இப்படித்தான் தமிழகமும் உள்ளது. ஒவ்வொரு துறையிலும் பொறுப்பு கிடையாது என்று கூறி, வரிசையாக ஒவ்வொரு துறையாலும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் தனது தாயிடம் காண்பிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.
கண்டெய்னர்
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் பெரும் புயலை வீசச் செய்த கண்டெய்னர் லாரி பணம், ஆளும் கட்சிக்கு சொந்தமானது என்பதை போலவும், இதை மூடி மறைக்க சாட்டை டாட் காம் என்ற வெப்சைட் பத்திரிகையாளரை முதல்வர் கொலை செய்வது போலவும் காட்சி இடம் பெற்றுள்ளது.
இலவசம்
இலவசம் கொடுப்பது, வாக்குக்கு பணம் கொடுப்பது, முதல்வராக உள்ளவர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறை செல்லும் சூழல் உருவானதும், அவரை உடனிருக்கும் நம்பிக்கையான மகளே கொலை செய்து மக்களிடம் அனுதாபம் பெற்று, தானே முதல்வராக முயல்வது போன்றவையெல்லாம், எதன் எதன் குறியீடு என்பது சம கால அரசியல் தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும்.
பெயர் அரசியல்
வில்லி கதாப்பாத்திரமான வரலட்சுமிக்கு, கோமளவள்ளி என பெயர் சூட்டியிருப்பது, சற்குணம் ஐஏஎஸ் என முதல்வர் வேட்பாளராக ஒருவரை விஜய் முன்மொழிவது என்பது போன்றவை, 'பெயர் அரசியல்'. இவை எல்லாமே, சமகால அரசியலோடு ஒத்துப்போவதுதான், இப்போது படத்திற்கு எதிரான பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.