ரஜினி குறித்து அநாகரீகமான பேச்சு.. இயக்குநர் சுந்தரராஜன் தொடர்பான வதந்தியின் பின்னணி இதுதான்!
சென்னை: பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தரராஜன் குறித்து வதந்தி பரவியதற்கு காரணமே நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து அவர் வரைமுறை மீறி விமர்சித்ததுதான் என கூறப்படுகிறது.
Recommended Video
அரசியல் கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்பது 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தது. ஆனால் ரஜினிகாந்த் இன்னமும் அரசியல் கட்சியை தொடங்காமல் இருப்பது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
அத்துடன் ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்க்கிற பிரச்சனைகளில் நேர் எதிரான கருத்துகளை தெரிவித்து கடுமையான வசவுகளையும் வாங்கி கட்டிக் கொள்கிறார் ரஜினிகாந்த். தற்போது சி.ஏ.ஏ. தொடர்பாக ரஜினிகாந்த், மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் மத்திய அரசை எதிர்க்கும் ரஜினிகாந்த் சி.ஏ.ஏ, மக்களின் போராட்டம் குறித்து தெரிவித்தவை சர்ச்சையாகிப் போனது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இயக்குநரும் நடிகருமான சுந்தரராஜன் பேசும் வீடியோ பதிவு ஒன்று வைரலானது. அதில், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி முதல் கூட்டத்தை கோவையில் நடத்தப்படும். 2வது கூட்டத்தை திருப்பூரில் நடத்துவதற்குள் செத்து போய்விடுவார். அந்த அளவுக்கு உடம்பு கண்டிஷன் இருக்கு என கூறியிருக்கிறார்.
இந்த அநாகரீகமான பேச்சால் ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தரராஜன் இறந்துவிட்டதாக வதந்திகள் பரப்பிவிடப்பட்டன. இதன்பின்னரே சுந்தரராஜனின் மகன் அசோக் தமது சமூக வலைதளப் பக்கத்தில், அப்பா நலமாக இருக்கிறார்; சென்னையில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார் என பதிவிட்டிருக்கிறார்.
இயக்குநர் சுந்தரராஜன் நிச்சயம் இப்படி பேசியிருக்கக் கூடாது. நாவடக்கம் என்பது அவசியம். திரைப்படங்களில் பேசுவதைப் போன்ற குதர்க்கத்தை சுந்தரராஜன் பொதுவெளியில் காட்டக் கூடாது என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளட்டும். ரஜினியுடனான அரசியலில் மாறுபாடு இருந்தால் விமர்சிப்பது என்பது வேறு.. இத்தகைய நாலாந்தர பேச்சுகள் ரசிக்கக் கூடியவையே அல்ல.