விஜயகாந்த்தை சந்தித்த சரத்குமார்.. நலம் விசாரிக்க மட்டும்தானா அல்லது.. பின்னணியில் தினகரனா ?
Recommended Video
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சந்தித்துப் பேசியிருக்கிறார். என்ன காரணம் என்று தெரியவில்லை.
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இந்தியா வந்திருக்கும் விஜயகாந்த் சிவனே என்றிருக்கிறார். அவரை நாளொரு கட்சியும் பொழுதொரு தலைவர்களுமாக சென்று பார்த்து வருகின்றனர். பார்த்துவிட்டு வருபவர்களில் சிலர் உடல் நலன் விசாரிக்க சென்றேன். சிலர் அரசியலும் பேசினோம் என்கின்றனர். அப்போதெல்லாம் தேமுதிக தரப்பிலோ ஆலோசித்து வருகிறோம் என்று கூறினார்கள், இப்போதும் கூறுகிறார்கள், அடுத்து தேர்தல் முடிந்தபிறகும் கூட ஆலோசித்து வருகிறோம் என்று கூறுவார்களோ என்று கலக்கத்தில் உள்ளனர் தேமுதிக தொண்டர்கள்.
அதிமுகவோடு கூட்டணி அமைத்துவிடும் என்று கருதப்பட்ட தேமுதிக, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 +1 என்று ஒதுக்கப்பட்டதால் தங்களுக்கு அதற்கு மேல் ஒரு தொகுதியாவது அதிகம் வேண்டும் என்று எதிர்பார்த்து வருகிறது. இப்படியாக திமுக அதிமுக என்று இரு அணியினருடனும் பேசிக் கொண்டே இருக்கிறது தேமுதிக. இந்நிலையில் திருநாவுக்கரசர், ரஜினிகாந்த், ஸ்டாலின் என்று தலைவர்கள் வரிசையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து பேசியுள்ளார்.
அரசியல் நிலைப்பாட்டை கூறினேன்.. இனி விஜயகாந்த்தான் முடிவெடுக்க வேண்டும்.. சரத்குமார் சூசக பேட்டி!
விஜயகாந்தையாவது அதிமுக, திமுக, பாஜக என கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு சந்தித்து வருகின்றன. ஆனால் பாவம் சரத்குமாரை யாரும் தங்களது அணிக்கு வாருங்கள் என்று வெளிப்படையாக அழைப்பு விடுக்காத சூழலில் தேர்தல் குறித்த தனது முடிவை 5ம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இப்படிப்பட்ட சூழலில் தனித்து களம் இறங்கப் போவதாக அறிவித்த தினகரன் தன்னோடு சின்ன சின்ன கட்சிகளை இணைத்துக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி தெகலான் பாகவி தலைமையிலான எஸ்.டி.பி.ஐ கட்சியை இணைத்துக்கொண்டவர் அடுத்ததாக சரத்குமாரையும் தன்னோடு இணைத்துக்கொள்ளும் முயற்சியில் உள்ளார். சரத்குமாரும் தனக்கு ஒரு புகலிடம் கிடைக்கும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்த நிலையில் இன்று அவர் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளார். அதோடு பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டதையும் கழுவி கழுவி ஊற்றி வருகிறார். அரசியலில் விமர்சனங்கள் செய்யலாம் ஆனால் கீழ்த்தரமாக விமர்சித்து விட்டு ஒன்றாக அமர்ந்து பேசுவது எல்லாம் வேற லெவல் என்ற ரீதியில் அதிமுக பாமக கூட்டணியை சரத்குமார் விமர்சித்து வந்தார்.
இன்று விஜயகாந்தை சந்தித்துவிட்டு வந்தவர் செய்தியாளர்களையும் சந்தித்தார் அப்போது பேசியவர் அதிமுகவை பாமக கடுமையாக விமர்சித்து விட்டு கொள்கைகளை விற்றுவிட்டு அவர்களோடு கூட்டணி வைத்துள்ளனர் என்றார். தினகரனோடு கூட்டணி அமைக்கப் போகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்தவர் நட்புடன் உள்ள சில கட்சிகளோடு பேசிவருகிறோம் என்றும் தனது நிலைப்பாட்டை 5ம் தேதி தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
இந்த நிலையில் இன்று நிகழ்ந்த விஜயகாந்த் சரத்குமார் சந்திப்புக்கு பின்னணியில் தினகரன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜயகாந்தை அமமுகவோடு கூட்டணி அமைக்க விஜயகாந்திடம் சரத்குமார் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை விஜயகாந்த் இப்படி ஒரு நிலை எடுக்கும் பட்சத்தில் மூன்றாவது அணியாக தினகரன் விஜயகாந்த் அணி மாறும் வாய்ப்புள்ளது