சீட்டுக்கட்டு போல சரிந்த சென்செக்ஸ்.. பங்குச் சந்தை வீழ்ச்சியின் பின்னணி என்ன?
சென்னை: தொடர்ந்து ஏற்றம் கண்ட பங்குச் சந்தை, இன்று திடீரென சரிந்துள்ளது.
நேற்று மாலை, சென்செக்ஸ் 40,794 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 41,048 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 41,048 புள்ளிகளைத் தொட்ட நிலையில், தடால் என, 1,320 புள்ளிகள் சரிந்துவிட்டது. எனவே சென்செக்ஸ் 39,728 புள்ளிகளுக்கு கீழே இறங்கி வர்த்தகம் சரிந்தது.
இதற்கு சில காரணங்களை வல்லுநர்கள் கூறுகிறார்கள்:
Sensex Crash: சென்செக்ஸ் 1320 புள்ளிகள் சரிவுக்கான காரணங்கள் என்ன?
அமெரிக்க-சீனா பதட்டங்கள்
சீனாவின் ஆன்ட் குழுமத்தை வணிக தடுப்புப்பட்டியலில் சேர்க்க டிரம்ப் நிர்வாகத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை முன்மொழிவு செய்தது. எனவே, சீனா-அமெரிக்கா இடையே வணிக பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
கோவிட் -19 தொற்றுநோய் மீண்டும் பரவி விடுமோ என்ற அச்சம், பங்குச் சந்தை சரிவுக்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது. கொரோனா பரவலால் சில ஐரோப்பிய நாடுகள் பள்ளிகளை மூடுகின்றன, அறுவை சிகிச்சையை ரத்து செய்துள்ளன.
விற்பனை
கடந்த சில நாட்களில் பங்குச் சந்தைகளில் செய்து இருந்த முதலீடுகள் ஓரளவுக்காவது விலை ஏற்றம் கண்டு இருக்கும் என்பதால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள், தாங்கள் செய்த முதலீடுகளை விற்று லாபத்தோடு வெளியேறத் தொடங்கி இருக்கிறார்கள், எனவே பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்திருக்கலாம்.
உலக சந்தைகள் தாக்கம்
இந்தியா மட்டுமல்ல, லண்டனின் எஃப் டி எஸ் இ 2.23 % இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கிய நிலையில், பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 2.32 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 3.02 % இறக்கத்திலும் வர்த்தகமாகியுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தைகள் அனைத்துமே இறக்கத்தில்தான் இருக்கின்றன.