திருவாரூர்.. எல்லாரும் மாறி மாறி குழப்பினால் மக்கள் என்னதான் செய்வார்கள்?
அரசியல் கட்சிகள் ஏன் இப்படி மக்களை குழப்புகிறார்கள்?
Recommended Video
சென்னை: இப்படி எல்லாரும் மாறி மாறி குழப்பினால் மக்கள் என்னதான் செய்வார்கள்?
நடக்காமல் இருந்து இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இவ்வளவு நாளாக எத்தனையோ இழப்புகள், மரணங்கள், சர்ச்சைகள் என எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் மக்கள் இருக்கிறார்கள்.
18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கத்திற்கு பிறகு தமிழகத்தில் அத்தொகுதிகளுக்கு எம்எல்ஏக்கள் இல்லை. அந்த தொகுதிகளின் நிலை என்ன, அம்மக்களின் கதி என்ன?, அவர்களுக்கு ஒரு பிரச்சனை, தேவை என்றால் என்ன செய்வார்கள், யார் செய்வார்கள் என்று இதுவரை ஒருத்தரும் கண்டுகொள்ளவில்லை.
அரசின் கடமை
இதனிடையே திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏக்களும் இறந்துவிட, 18 கூட 2-ம் சேர்ந்து 20 தொகுதிகள் ஆகிவிட்டது. இந்த 20 தொகுதி மக்களின் நலனை பற்றி சிந்திக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்றால், பிரச்சனையை சீக்கிரம் சரிக்கட்ட வேண்டியது தேர்தல் ஆணையம்.
விடிவு எப்போது
எப்போது 20 தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும், எப்போது விடிவு பிறக்கும் என்று மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். அதற்காகதான் எத்தனையோ இம்சைகளையும் பொறுத்து கொண்டு வருகிறார்கள். ஆனால் ஒரே ஒரு தொகுதிக்கான அனுமதி கோர்ட் கொடுத்தும், அதனை கட்சிகள் யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. வழக்கம்போல் நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கியும், அதற்கான வியூகங்களை அமைத்தும் காய்களை நகர்த்தி வருகிறார்கள்.
விளம்பரங்கள்
திருவாரூரில் கருணாநிதிக்கும் சரி, தினகரனுக்கும் சரி, கம்யூனிஸ்ட்களுக்கும் சரி ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உள்ளது. ஏற்கனவே கருணாநிதி இறந்தவுடன் இப்படித்தான் திருவாரூர் மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஜரூராக தேர்தல் வேலைகளில் இறங்கினர். சுவர்களில் எல்லாம் விளம்பரங்கள் இடம்பிடித்த நிலையில், அந்த வேகம் இப்போது காணப்படவில்லை.
ஒதுங்குவதா?
அரசியல் கட்சிகளுக்கு தேவை என்றால் களத்தில் இறங்குவது, வேண்டாம் என்றால் ஒதுங்கி கொண்டு வேறு வேலை பார்ப்பதா? எப்போது களம் இறங்குகிறார்களோ அப்போது மக்களும் இவர்களுக்கு ஓடிவந்து ஆதரவை தர வேண்டுமா?
மாறி மாறி முடிவு
அது மட்டும் அல்ல, ஒரு பக்கம் வேட்பு மனு தாக்கல், மற்றொரு பக்கம் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று கட்சிகள் மாறி மாறி முடிவை எடுத்தால், திருவாரூர் மட்டுமல்ல, மற்ற மாவட்ட மக்களே என்ன நினைப்பார்கள்? இடைத்தேர்தல் தேதியை அறிவித்தபோதே புயல் நிவாரணம் மிச்சமிருக்கிறது என்ற விஷயமும், பொங்கல் வரப்போகிறது என்ற விஷயமும் தெரிந்துதான் இருக்கும்.
குழப்ப வேண்டாம்
பெரிய, பிரதான கட்சிகளுக்கே ஒரு இறுதியான, உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லையே என்று நினைக்க மாட்டார்களா? ஒரு தொகுதியை சந்திக்கவே இப்படி யோசிக்கிறார்களே, தயங்குகிறார்கறேள என்ற சிந்தனை வராதா? தேர்தலை சந்திப்பது என்றால் அது யாராக தைரியமாக சந்திக்கட்டும்... இல்லையென்றால் பேசாமல் ஒதுங்கி இருக்கலாம். அதற்காக மக்களை போட்டு குழப்பி கொண்டு இருப்பது சரியில்லை.