சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம் என்ன?..ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதி எல்லாம் மறந்து போச்சா!
சென்னை: சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது. இதற்கு காரணமாக கடந்த 4 நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் கேஸ்கள் அதிகரித்ததுதான் காரணம் என சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டன. இதனால் 5 இலக்கங்களில் இருந்த தினசரி கொரோனா கேஸ்கள் குறைந்தது.
தமிழகத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை வெறும் 1500க்குள் மட்டும் இருந்து வந்தது. இந்த நிலையில் சென்னையிலும் கடந்த 4 நாட்களாக கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன.
கூட்டம் கூடினால் அந்த பகுதிகளில் உள்ள கடைகளை மொத்தமாக மூடலாம்.. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு
சென்னையில் கேஸ்கள் 130 இருந்தது
இத்தனை நாட்களாக சென்னையில் 130-க்குள் இருந்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 68 நாட்களுக்கு பிறகு ஜூலை 27-ஆம் தேதி 139 ஆக அதிகரித்தது. அது போல் ஜூலை 28 ஆம் தேதி 164 ஆக உயர்ந்தது. ஜூலை 29-ஆம் தேதி 181 ஆக உயர்ந்தது. ஜூலை 30 ஆம் தேதி 215 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசு கூறுவது என்ன
இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்கையில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதால் கொரோனா கேஸ்கள் அதிகரித்ததாக தெரிவித்தனர். அது போல் சென்னையில் டெஸ்ட் பாசிட்டிவிட்டி ரேட்டும் லேசாக உயர்ந்துள்ளது.
சென்னை கடைகள்
கடந்த 3 வாரங்களாக சென்னையில் கடைகளுக்கு ஏராளமான மக்கள் பொருட்களை வாங்க குவிந்ததுதான் இதற்கு காரணம் ஆகும். கடந்த மார்ச் மாதம் கொரோனா 2ஆவது அலை தொடங்குவதற்கு முன்பை விட தற்போது அதிகளவிலான மக்கள் ஷாப்பிங் செல்கிறார் என தனியார் கோவிட் டேட்டா ஆய்வாளர் விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மாஸ்க் அணிவதே இல்லை
மேலும் மக்கள் இவ்வாறு கடைகளுக்கு செல்லும் போது மாஸ்க்களை ஒழுங்காக அணிந்திருக்கவில்லை. சிலர் மாஸ்க்கே அணியாமல் சென்றனர். அது போல் கடற்கரைகளிலும் மாஸ்க் இல்லாமல் பொதுமக்கள் செல்வதால் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. பொழுதுபோக்கு என்பது முக்கியம்தான். ஆனால் நம் உயிர் நம் உற்றார் உறவினர்களின் உயிர்கள் அதை விட முக்கியம் என்பதை மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இல்லாமலும் படுக்கைகள் இல்லாமலும் அவதிப்பட்டதை அறிந்தும் கூட இப்படி இருந்தால் கொரோனா எப்படி ஒழியும்?
சென்னையில் 9 இடங்களில் கடைகள் மூடல்
இந்த பரவல் மேலும் அதிகரிப்பதை தடுக்க சென்னையில் 9 இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும். ரங்கநாதன் தெரு வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஜாம் பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாரில் வணிக வளாகம், கொத்தவால்சாவடி சந்தை, ராயபுரம் சந்தை, அமைந்தகரை சந்தை ஆகிய கடைகள் மூடப்படுகிறது.
சமூக இடைவெளி இல்லை
இது போன்ற கடைகளில் மக்கள் அதிகளவில் சமூக இடைவெளியின்றி கூடி வருகிறார்கள். மேலும் மாஸ்க் அணிவதையும் பொதுமக்கள் கடைப்பிடிப்பதில்லை. கொரோனா 2ஆவது அலை சற்று ஓய்ந்தவுடன் மக்களுக்கு பயம் விட்டு போச்சு என்பதையே இந்த கேஸ் உயர்வுகள் காட்டுகின்றன.
Recommended Video
இன்னும் சில மாதங்களில் 3 ஆவது அலை
கொரோனா 3ஆவது அலை வரப்போகிறது. அரசு என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் நாமும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். பொறுப்பில்லாமல் ஒரு சிலர் நடந்து கொள்வதால் இன்று தேவையில்லாமல் கடைக்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நேரத்திலேயே நாம் ஒரு வாரத்திற்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டோம். அது போல் இனியும் தொடர்ந்தால் சென்னையில் தொற்று குறைந்துவிடும்.
கடைக்காரர்களும் சமூக இடைவெளி
கடைக்காரர்களும் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளி இல்லாமலும் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை கொடுக்க மாட்டோம் என்பதில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அரசுக்காகவும் அபராதத்திலிருந்து தப்பவும் பொய்யாக கடைகளின் வெளியே சிலர் மாஸ்க் அணியாமல் வந்தால் பொருட்கள் கிடையாது என போர்டு வைத்துள்ளார்கள். இந்த மனநிலையை அவர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.