"கோயிலுக்கு போனால்.. முதல்வர் ஆயிடலாமா?".. சிவனேன்னு இருக்கும் துர்கா ஸ்டாலினை.. சீண்டி விட்ட சாமி!
துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்கலாம் என்று சு.சாமி கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: யார் வம்பு தும்புக்கும் போகாதவர் துர்கா ஸ்டாலின்.. அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று சுப்பிரமணிய சாமி ஒரு யோசனையை கிளப்பி விட்டுள்ளார்.. திமுக தரப்பை இந்த விஷயம் பெரும் எரிச்சலை உண்டு பண்ணி உள்ளது.
Recommended Video
மூத்த தலைவர் சு.சாமிக்கிட்ட இருந்து ட்வீட் வந்தால் மட்டுமில்லை.. பேட்டி வந்தாலே அரசியலில் ஒரு சலசலப்பு வந்து தொற்றி கொள்கிறது.. பாஜகவில் இவர் இருந்தாலும்கூட எப்பவுமே சேம் சைட் கோல் போட்டுக் கொண்டே இருப்பார்... தொடர்ந்து கட்சியிலும் நீடித்து வருவார்.
இதற்கு காரணம், காங்கிரஸ் தலைவர்கள் பலரை கேஸ் போட்டு சிக்கலில் மாட்டி வைத்தவர், மாட்டி வைப்பவர்... அதனாலேயே இவரை பாஜக தலைமை பல சமயங்களில் கண்டு கொள்ளாமலேயே உள்ளது. ஒரு அரசியல்வாதிக்குரிய சமூக ஆதரவோ, பொது மக்களிடம் அவ்வளவாக செல்வாக்கோ இல்லாத ஒருவரால் எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது என்று மக்களே அடிக்கடி வியந்து பார்ப்பார்கள்.
நீட் தேர்வை ஒத்திப்போடுங்கள்.. அல்லது மாணவர்கள் தற்கொலைக்கு வழி வகுக்கும்.. மோடிக்கு சு.சாமி கடிதம்
சிதம்பரம்
இவர், தனக்குதானே பப்ளிசிட்டி தேடி கொண்டே இருப்பார்.. திடீரென வந்து எதையாவது பூகம்பத்தை கிளப்பி விடுவதில் இவருக்கு நிகர் யாருமே இல்லை.. ரஜினியை சீண்டுவார், "சிதம்பரம் சீக்கிரம் கம்பி எண்ணுவார்" என்று ஆரூடம் சொல்வார்.. "சசிகலாவுக்கு எப்பவுமே விசுவாசமாக இருக்கணும்" என்று அதிமுக தரப்புக்கு அட்வைஸ் தருவார். அப்படிதான் ஒரு குண்டை திமுக பக்கம் தூக்கி போட்டுவிட்டு கிளம்பி சென்றுள்ளார்.
துர்கா ஸ்டாலின்
ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், "ஸ்டாலினுக்கு ஓய்வு தர வேண்டும்.. துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்கலாம்.. அவரை முன்னிறுத்தினால் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.. துர்கா ஸ்டாலின்தான் வெளிப்படையாக கோவிலுக்கு போகிறார்.. பொட்டு வைத்துக் கொள்கிறார்.. அதனால் முதல்வரை வேட்பாளராக அறிவித்து, அவருக்கு ஸ்டாலின் ஆதரவு தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சு.சாமி
முதலாவதாக, சுப்பிரமணியசாமி இப்படி ஒரு கருத்தை சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? அதற்கான தேவை, கட்டாயம், நிர்ப்பந்தம் என்ன? கூட்டணி கட்சியில் கூட இல்லாதவர், திமுகவை ஏன் வம்புக்கிழுக்க வேண்டும் என்பதே நம் சந்தேகமாக உள்ளது. கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத துர்காவை எப்படி முதல்வர் வேட்பாளராக்க முடியும்? அடிப்படை தெரிந்துதான் இவர் பேசுகிறாரா என தெரியவில்லை.
போட்டோக்கள்
துர்கா ஸ்டாலினை பொறுத்தவரை ஆன்மீகத்தில் ரொம்பவும் ஈடுபாடு கொண்டவர்.. அதனால் அடிக்கடி கோயிலுக்கு சென்று வருவார்... அவர் எப்போதெல்லாம் கோவிலுக்கு செல்கிறாரோ அப்போதெல்லாம் அது சம்பந்தமான போட்டோக்கள் இணையத்தில் உலா வரும். உடனே "இதுவா திமுகவினரின் பகுத்தறிவு கொள்கை" போன்ற விமர்சனங்களும் கூடவே எழும்.
நிர்ப்பந்தம் என்ன?
இருந்தாலும், துர்கா ஸ்டாலின் தான் கோயிலுக்கு செல்வதை மறைத்தது இல்லை.. ஜோதிடர் பாலாஜி ஹசனை சந்தித்ததையும் மறைக்கவில்லை.. அது அவரது நம்பிக்கை.. பகுத்தறிவு என்பது தானாக தனக்குள் ஏற்படுவது, அது யார் சொல்லியும், கட்டாயப்படுத்தியும் ஒருபோதும் வருவது கிடையாது என்பதுதான் வாழ்வின் யதார்த்தம்.
திமுக கூட்டணி
இந்த ஒருவிஷயத்தை வைத்து கொண்டு, துர்காவை இழுத்து திமுகவில் சலசலப்பை ஏற்படுத்த சு.சாமி முயல்வது முற்றிலும் தவறானதே!! கட்சி ரீதியாக, கருத்தியல் ரீதியாக திமுக மற்றும் அதன் கூட்டணியுடன் மோதுவதை விட்டு விட்டு, சம்பந்தமே இல்லாமல், யார் வம்புக்கும் போகாத துர்காவை இதில் இழுத்து, ஸ்டாலினையும், திமுகவையும் விமர்சிப்பதை ஏற்க முடியாது.
இது போதுமா?
அது மட்டுமில்லை.. இவ்வளவு வருடம் அரசியலில் ஒரு சீனியராக இருக்கும் சு.சாமியிடம் ஒரே ஒரு கேள்வியை நமக்கு கேட்க தோன்றுகிறது.. கோயிலுக்கு போவது மட்டுமே முதல்வர் பதவிக்கான ஆகும் தகுதி ஆகிவிடுமா?!