பொதுக் குழு கூட்டாமல் தற்காலிக அவைத் தலைவர் பதவி ஏன்?.. தமிழ்மகன் உசேன் நியமனத்தின் பின்னணி என்ன?
சென்னை: அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஏன் நியமிக்கப்பட்டார் என்ற தகவல்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள் மூலம் தற்போது வெளியாகியுள்ளன.
அதிமுகவின் அவைத் தலைவர் பதவிக்கு தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா, செங்கோட்டையன், பொன்னையன், செம்மலை, தனபால் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரையில் இருந்தன.
இவர்களில் சிறுபான்மைப் பிரிவை சேர்ந்த தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா ஆகிய இருவரில் ஒருவருக்கு இந்த பதவியை கொடுக்க வேண்டும் என்பது ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் விருப்பமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!.. முன்மொழிந்தார் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவில் பயணம்
அன்வர் ராஜாவும் தமிழ்மகன் உசேனும் நீண்ட காலமாக அதிமுகவில் பயணிப்பவர்கள். இந்த நிலையில் 68 ஆண்டுகளாக எம்ஜிஆர் கட்சியை தொடங்கிய நாள் முதல் ஒரே கட்சியில் இருந்து வருவதால் அவைத் தலைவர் பதவியை தனக்குத்தான் கொடுக்க வேண்டும் என தமிழ்மகன் உசேன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.
அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவர்
இன்றைய தினம் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தில் தற்காலிக என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு காரணம் அவைத் தலைவர் பதவியானது பொதுக் குழுவால் நியமிக்கப்படுவது. எனவே பொதுக் குழு கூடி நியமிக்கும் வரை தற்காலிக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தொடருவார்.
அவைத் தலைவர்
பொதுக் குழுவை கூட்டி அவைத் தலைவரை தேர்வு செய்வதற்கு பதிலாக அதிமுக வரலாற்றில் இல்லாத ஒரு நடைமுறையாக தற்காலிக என்ற வார்த்தையுடன் கூடிய பதவி தங்களுக்கு விசித்திரமாக இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். பொதுக் குழுவை கூட்டாமல் ஏன் இத்தனை அவசர அவசரமாக தற்காலிக அவைத் தலைவர் நியமனம் என்பது குறித்த தகவல்களையும் விவரம் அறிந்த வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
அன்வர் ராஜா
அதாவது கடந்த வாரம் சென்னையில் எம்ஜிஆர் மாளிகையில் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா தற்போது அதிமுக வலுவில்லாமல் உள்ளது. அதனை வலுப்படுத்த சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்றார். இதனால் மற்ற நிர்வாகிகள் அன்வர் ராஜாவை வெளியே செல்லுமாறு கூச்சலிட்டனர்.
எடப்பாடி பழனிச்சாமி
மேலும் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியை அன்வர் ராஜா ஒருமையில் பேசியது தெரியவந்தது. இதை எடப்பாடி பழனிச்சாமி பெரிதுப்படுத்தவில்லை என்றும் மற்றவர்கள் பெரிதுப்படுத்தி என்னை வெளியேற சொன்னார்கள் என்றும் ஊடகங்களுக்கு அன்வர் ராஜா பேட்டியளித்திருந்தார்.
Recommended Video
தற்காலிக அவைத் தலைவர்
இந்த நிலையில் நேற்றைய தினம் அன்வர் ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இவர் சசிகலா ஆதரவாளர், பாஜக எதிர்ப்பாளர் என்பதால் நீக்கப்பட்டதாக தெரிகிறது. சிறுபான்மையின சமூகத்தை சேர்ந்த அன்வர்ராஜாவை நீக்கியதால் அச்சமூகத்தினர் அதிருப்தி அடைய கூடாது என்பதற்காக அதே சமூகத்தை சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு தற்காலிக அவைத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.