ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்.. யூ டர்ன் போட்டு மியூட் மோடுக்கு போன தமிழருவி மணியன்! என்னாச்சு?
சென்னை: ஆரவாரமாக ஒரு பேட்டியை கொடுத்துவிட்டு, இப்போது ரொம்பவே அடக்கிவாசிக்கிறார் தமிழருவி மணியன். மொத்த இந்தியாவும், அந்த ஒத்த பேட்டியை பார்த்து பரபரத்துக்கிடக்க, மனிதன் இப்போ ரொம்பவே பம்புகிறார். அதை பற்றி இனி பேசவே மாட்டேன் என்கிறார்.
ஆமா.. அதேதான்.. ரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி துவங்குவார், ஆகஸ்ட் மாதம், முதலாவது, கட்சி மாநாட்டை நடத்துவார் என்று தமிழருவி மணியன் கூறிய அந்த பேட்டிதான். அதைவிட முக்கியமாக, பாமகவுடன், ரஜினிகாந்த் கூட்டணி வைப்பார் என்று ஒரு அதிரடி தகவலையும் தனது பேட்டியில் தமிழருவி மணியன் கூறினார்.
தமிழருவி மணியன் இப்படி ஒரு பேட்டியை, ஆங்கில நாளிதழுக்கு கொடுக்க, அது நாடு முழுக்க வைரலாகியது. அத்தனை மீடியாக்களும் மைக்கும் கையுமாக, தமிழருவி மணியன் வீட்டில் குவிந்தன. அருவி மாதிரி பேட்டியளிப்பார் என்று நினைத்து போன பத்திரிக்கையாளர்களுக்கு நாட் ரீச்சபிள்தான் பதிலாக கிடைத்தது.
கூல் ரியாக்ஷன்
அப்படியும் எப்படியோ தாவி குதித்து சில மீடியாக்கள், மைக்கை நீட்ட, ஏதோ தூக்கம் கலைந்து எழுந்தவர் போல, ஓ.. அப்படியா என கூல் ரியாக்ஷன் கொடுத்து குழப்பிவிட்டார் மனிதர். அட.. நாடே பரபரப்பா இருக்கு, நீங்க, என்னடான்னா, ஆடு திருடு போகல.. அப்படி கனவு கண்டேன்னு சொல்ற மாதிரி ஒரு லுக்க கொடுக்குறீங்களே என ஜெர்க் ஆகிவிட்டனர் நிருபர்கள்.
நிருபர்கள்
"ஒன்னும் அவசரமில்லை.. காபி குடிச்சுட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வாங்க.. நாங்க வெயிட் பண்றோம் சார்.." என பலத்த யோசனையோடு, சோபாவில் சட்டென உட்கார்ந்துவிட்டனர் நிருபர்கள். அப்புறம் ஆசுவாசப்படுத்தி வந்த தமிழருவி மணியனிடம், கேள்விக் கணைகளை தொடுத்தனர் பத்திரிக்கையாளர்கள். அதாவது.. என அவர் தொண்டையை செருமிக்கொண்டபோது, சோபாவின் நுனிக்கே வந்தனர் நிருபர்கள்.
கேட்டார்கள் சொன்னேன்
ஆங்கில நாளிதழ் பத்திரிக்கையாளர், ரஜினி ஏப்ரலில் கட்சி தொடங்குவாரா என்றார், பாமகவோடு கூட்டணி வைப்பாரா என்றார், ஆகஸ்டில் மாநாடு நடத்துவாரா என்றார், எல்லாவற்றுக்கும், இருக்கலாம் என்ற தொனியில் நான் பதில் சொன்னேன். இதைப்போய் இப்படி பரபரப்பு பண்றீங்களே என்றார். அந்த இடமே ஒரு நிமிடம் நிசப்தமாகிவிட்டது. "கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்.." என்ற பாடல் நிருபர் ஒருவரின் ரிங்டோனாக ஒலிக்க, அப்போதுதான் இயல்புநிலைக்கு வந்தது அந்த இடம்.
ரஜினிகாந்த் அதிருப்தி
என்னாச்சு தமிழருவி மணியனுக்கு? ஏன், பேட்டி கொடுத்த மறுநாளே, இப்படி அடக்கி வாசிக்கிறார் என்று விசாரித்தோம். பொதுவாக ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து ரொம்பவே சீக்ரெட் பராமரிக்கிறார். சட்டசபை தேர்தலுக்கு முன்பு கட்சி துவங்குவேன் என்பது மட்டுமே அவரின் அதிகபட்ச அரசியல் சார்ந்த பதில். அப்படி இருக்கும்போது, தமிழருவி மணியன் இப்படி, அத்தனை விஷயத்தையும் அருவி மாதிரி கொட்டியதால், உச்சநட்சத்திரம், உச்சகட்ட அப்செட்டாம்.
அமைதியான தமிழ்
தமிழருவி மணியனை போனில் தொடர்பு கொண்டு, நீங்கபாட்டுக்கு இப்படியா சொல்லி வைப்பீங்க.. என ஏகத்துக்கும் ஆதங்கத்தை கொட்டி, அன்போடு கடிந்து கொண்டாராம் ரஜினி. இனிமேல் எனது அரசியலை பற்றி எதுவும் பேசக்கூடாது என அழுத்தமாக சொல்லிவிட்டு, செல்போனை கட் செய்துள்ளார் ரஜினி. இப்படி ஒரு கடுமையை ரஜினியிடமிருந்து எதிர்பார்க்கவில்லையாம் தமிழருவி மணியன். ஜெயலலிதா பாணியில் கட்சியை நடத்த ஆசைப்படுபவர் ரஜினிகாந்த். எனவே எந்த ரகசியமும் கசியக்கூடாது என்பதில் கண்டிப்பு காட்டுகிறாராம். அதனால் தமிழருவி மணியன் இப்போ கப்சிப். இனிமேல் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கும்வரை, அதுபற்றி பேசவே மாட்டேன் என சொல்லிவருகிறார் அவர்.