இந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்க காரணம் என்ன.. இதாங்க!
Recommended Video
சென்னை : இந்தி திணிப்பை தமிழர்கள் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதாக சிலருக்கு வருத்தம் இருக்கும். அது ஏன் என்பதற்கு விளக்கம் தர வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.
இந்தி கற்பது என்பது வேறு. இந்தி திணிப்பு என்பது வேறு. தமிழகத்தில் இந்தி கற்பதற்கு எந்த தடையும் இல்லை. இந்தியை திணிப்பதற்கு தான் தடை உள்ளது. அதற்கு முக்கிய காரணம் தமிழ் மொழியை காப்பது தான். அதற்காகவே எங்கள் முன்னோர்கள் இந்திக்கு எதிராக போராடினார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அது உண்மையும் கூட.
சரி இப்போது நேராக விஷயத்துக்கு வந்திடுவோம். எனக்கும் உங்களுக்கும் இந்தி தெரிகின்ற போது.. நான் ஏன் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டிய என்ற எண்ணம் இயல்பாக வந்துவிடும் அல்லவா? அந்த பயம் தான் மொழியை காப்பதற்கான போராட்டமாக தமிழகத்தில் வெடித்தது.
அமித் ஷா அப்படி சொல்கிறார்.. ராணுவம் இப்படி பாடுகிறது.. இதுதான் இந்தியா!
இந்தி தான் பேசுவார்கள்
தமிழகத்தை விட்டு வெளியே சென்றால் நிச்சயம் இந்தி தேவை என்கிறார்கள்.அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் வடமாநில நண்பர்கள் நிறைய பேருடன் பணியாற்றிய அனுபவத்தில் ஒருவிஷயத்தை சொல்கிறேன். என்னுடன் இருந்த உத்தரப்பிரதேசம், பீகார், குஜராத் உள்பட வட மாநில நண்பர்கள் பலர் என்னுடன் ஆங்கிலத்தில் பேசுவதை துளியும் விரும்ப மாட்டார்கள்.
ஏன் இந்தி கற்க கூடாது
இந்தியில் பேசுவதை தான் விரும்புவார்கள். ஒரு சிலரே ஆங்கிலத்தில் புலமை பெற்று இருப்பார்கள். அவர்கள் என்னிடம், ஏன் உங்கள் ஊரில் இந்தியை வெறுக்கிறார்கள் என்று கேட்டு சண்டை போடுவார்கள். நான் அவர்களிடம் என்னை போல் தானே உங்கள் ஊரில் உள்ளவர்களும் இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை படித்து வந்திருப்பார்கள். அப்புறம் என்ன பிரச்சனை ஆங்கிலத்தில் பேசுவதற்கு என்று கேட்பேன். அதற்கு அவர்கள் எங்களை சுற்றி எல்லோரும் இந்தி பேசுவதால் யாருக்கும் ஆங்கிலம் பேச வேண்டிய அவசியமே வரவில்லை என்றார்கள். அவர்களிடம் நான் ஆங்கிலம் சரியாக வராது என்பதற்காக என்னை இந்தி பேச சொல்கிறீர்களே, பேசாமல் நீங்கள் இந்தியை கற்றுக்கொண்டது போல் ஆங்கிலத்தை ஏன் கற்றுக்கொள்ளக்கூடாது என்று கேட்டால் பதிலே வராது.
இந்திக்கு முக்கியத்துவம்
அப்படித்தான் வடமாநிலங்களில் உள்ளது இன்றைய எதார்த்தம். அவர்கள் சொல்வதில் உள்ள முக்கிய விஷயம் என்னவென்றால் எல்லோருக்கும் இந்தி தெரியும் என்கிற போது எதற்கு ஆங்கிலம் என ஒதுக்குவது போல் அவர்களின் தாய்மொழியையும் ஒதுக்கி வருகிறார்கள். தாய்மொழி என்பது பேச்சுமொழி போல் வட மாநிலங்களில் மாற்றி வைத்து வருகிறார்கள். இதனால் அவர்களின் தாய் மொழி அழிந்து வருகிறது. அவர்கள் அனைவரும் தாய்மொழியைவிட்டு விட்டு இந்திக்கு கைதூக்குகிறார்கள்.
தமிழ் அழிந்துவிடும்
நாளை தமிழகத்தில் இந்தியை கட்டாயம் ஆக்கினால் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் இந்தியை பேச தொடங்கிவிடுவார்கள். ஏன் ஆங்கிலத்திலும் பேசுவார்கள் ஆனால் தாய்மொழியான தமிழ்மொழியை பேச வேண்டிய அவசியம் ஒரு கட்டத்தில் இல்லாமல் போய்விடும். அதன் பிறகு அழிந்துவிடும். இதுவே இந்தி திணிப்பை எதிர்க்க முக்கிய காரணம்.
நீங்கள் ஆங்கிலம் கற்கலாமே
இந்தி திணிப்பை தமிழர்கள் எதிர்க்க இன்னொரு முக்கிய காரணம், இந்தியா என்பது பல மொழிகள் , பல இன மக்கள் சேர்ந்து வாழும் நாடு. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் உள்ள நாடு அல்ல. ஒருவர் மொழியை மற்றவர் மீது திணிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதே தமிழ் மக்களின் கொள்கை. வடமாநிலத்தவருக்கு தாய் மொழி இந்தி, அவர்கள் என்னுடன் பேச இரண்டாவது மொழியாக ஆங்கிலத்தை கற்பதை விட்டுவிட்டு, என்னை தமிழ் ஆங்கிலத்துடன் சேர்த்து மூன்றாவது மொழியாக அவர்களது இந்தி மொழியை கற்க சொல்வது எந்த வகையில் நியாயம். எனக்கு வேண்டுமானால் நான் இந்தி கற்றுக்கொள்வேன். வலிய திணிக்க முடியாது. இதுதான் தமிழகத்தில் நிதர்சனம்.