தமிழகம் முழுக்க 90% தளர்வு.. சில விஷயங்களுக்கு மட்டுமே ஏன் தடை? ஏன் கட்டுப்பாடு? இதுதான் காரணம்!
சென்னை: தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள லாக்டவுனில் பெரிய அளவில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு சில செயல்பாடுகளுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஏன் குறிப்பிட்ட விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை? ஏன் இன்னும் சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு தொடர்கிறது என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
அதிரடி திருப்பமாக தமிழகத்தில் நேற்று பெரிய அளவில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. பலரும் எதிர்பார்த்த வகையில் மிகப்பெரிய அளவில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட 90% விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்கு முன்பு இருந்ததை போன்ற நிலைமை ஏறத்தாழ தற்போது மீண்டும் வர இருக்கிறது.
நாளை முதல் தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. முழு விவரம்
அனுமதி அளிக்கப்பட்ட விஷயங்கள்
தமிழகத்தில் நேற்று இ - பாஸ் தளர்வு , பேருந்து போக்குவரத்து அனுமதி, 100% பணியாளர்களுடன் அலுவலகம் இயங்க அனுமதி, ஞாயிறு லாக்டவுன் ரத்து, மெட்ரோ தொடக்கம் என்று பல முக்கியமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் எல்லாம் மக்கள் வைத்த கோரிக்கை காரணமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இனி இ பாஸ் தேவையில்லை. மாவட்டத்திற்கு உள்ளே பேருந்து போக்குவரத்து, செப்டம்பர் 1 முதல் துவங்கும்.
ஆனால் என்ன
ஆனால் தமிழகத்தில் இப்படி அதிரடி தளர்வுகள் கொண்டு வரப்பட்டாலும், சில விஷயங்களுக்கு இன்னும் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும். புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து தடை தொடரும்.
நீடிக்கும் தடை
அதேபோல் தமிழகத்தில் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும். திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை தொடரும்.
ஏன் இப்படி
இப்படி சில செயல்பாடுகளுக்கு மட்டுமே தடை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது. அதன்படி, மத்திய அரசு மேற்கண்ட செயல்பாடுகளை தொடங்க அனுமதி அளிக்கவில்லை. முழுமையாக லாக்டவுன் முடியும் வரை, அல்லது அடுத்தகட்ட தளர்வு வரும் வரை மேற்கண்ட செயல்பாடுகளை தொடர கூடாது என்று மத்திய அரசு கறாராக கூறிவிட்டது. இதனால்தான் அன்லாக் 2.0ல் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அன்லாக் 4.0ல் கூட திறக்கப்படவில்லை.
கல்வி நிறுவனங்கள்
மாணவர்களை பள்ளிக்கு வர சொல்லி ரிஸ்க் எடுக்க முடியாது. இதனால் மத்திய அரசும் பள்ளிகளை திறக்க அனுமதிக்கவில்லை. மாநில அரசும் இதற்கான தளர்வை அறிவிக்கவில்லை. கேரள அரசு 2021 ஜனவரி மாதம்தான் பள்ளிகளை திறக்க திட்டமிட்டு வருகிறது. அந்த அளவிற்கு பள்ளி, கல்லூரி திறப்பில் அரசுகள் அதிக கவனமாக இருக்கிறது. இதுதான் கல்வி நிறுவன தடைக்கு காரணம். ஆனால் தமிழகத்தில், மத்திய அரசு அனுமதித்த சில செயல்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அனுமதி
மத மற்றும் அரசியல் கூட்டங்களை 100 பேருடன் நடந்த மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் தமிழகத்தில் இதற்கான தடை தொடரும் என்று அறிவித்துள்ளனர். இப்போது கூட்டங்களை நடத்த அனுமதித்தால் அது பெரிய ரிஸ்காக மாறும் என்று தமிழக அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறுகிறார்கள். அதிலும் மருத்துவ நிபுணர் குழு, இப்படி கூட்டங்களை நடத்துவது சரியாக வராது என்று ரெட் சிக்னல் கொடுத்ததாக தெரிகிறது.. இதுவும் கூட மாநிலத்தில் கூட்டங்களுக்கு தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் ஆகும்.
வேறு சில தடை
இது போக தற்போது அவசியம் இல்லை என்று அரசு கருதும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர், நீச்சல் குளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு மிக எளிதாக கொரோனா பரவும் என்பதால் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இப்போது இந்த சேவைகளை தொடங்க வேண்டிய கட்டாயம் இல்லை. மேலும் மத்திய அரசும் இதற்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
ஒரே பின்னணி இதுதான்
தமிழகத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட தளர்வுகள் எல்லாம் அத்தியாவசிய தேவைகள். முழுக்க முழுக்க மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்திற்கும் ''பிளாக்'' போட்டு இருக்கிறார் முதல்வர் பழனிசாமி. அதாவது அவசிய தேவை இல்லாத விஷயங்களுக்கு இப்போது அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த விதத்தில் இந்த தளர்வுகளை பாராட்ட வேண்டியது மிக மிக அவசியம்.
மீண்டும் வருகிறது
இனி தமிழகத்தில் மீண்டும் பணிகள் தொடங்கப்படும். அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும். ஒரு பக்கம் கொரோனா இருந்தாலும், இன்னொரு பக்கம் தமிழகத்தில் மக்கள் தங்கள் பணிகளை தொடங்க போகிறார்கள். சில விஷயங்களை தவிர்த்து அனைத்தும் மீண்டும் செயல்பாட்டிற்கு வர போகிறது. முடிந்த அளவு சமூக இடைவெளி, மாஸ்க் என்று சுய கட்டுப்பாட்டுடன் மக்கள் தங்கள் பணிகளை செய்ய வேண்டிய மட்டுமே இனி முக்கியம்!