ஒரு பேட்டி.. உசுப்பேறிய ஐடி விங்.. தங்க தமிழ்ச்செல்வன் திடீர் கொந்தளிப்பு பின்னணி இதுதான்!
Recommended Video
சென்னை: திடீரென எதற்காக டிடிவி தினகரன் பற்றி கடும் விமர்சனத்தை தொலைபேசி உரையாடலில் தங்க தமிழ்ச்செல்வன் முன்வைத்தார் என்பது பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன், அந்த கட்சி, பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விமர்சிக்கும் ஆடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தங்க தமிழ்செல்வன், அமமுக பற்றி நான் பேசியது உண்மைதான் என்றார்.
அவதூறு
சில விஷயங்களை மாற்ற வேண்டும் மற்றும் சரி செய்ய வேண்டும் என்று சொன்னேன். அப்படி மாற்ற முடியாது என சொன்னால், என்னை கட்சியில் இருந்து நீக்க வேண்டியதுதானே. அதைவிடுத்து, என்னைப் பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் முன்னாள் அமமுக நிர்வாகியும், தற்போது திவாகரனின், அண்ணா திராவிடர் கழக நிர்வாகியுமான தேனி கர்ணன் அளித்துள்ள ஒரு பேட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தரக்குறைவாக விமர்சனம்
அமமுக தோல்வி பற்றி தங்க தமிழ்ச்செல்வன் சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமமுகவை மக்கள் ஏற்கவில்லை என்று தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடிக்கும் என்றும் கூறினார். இதனால் அமமுக ஐ.டி. பிரிவினர் தங்க தமிழ்ச்செல்வனை தரக்குறைவாக விமர்சித்திருக்கின்றனர். மட்டமான மீம்களை வெளியிட்டுள்ளனர். அதனால்தான், தங்க தமிழ்ச்செல்வன் போன் போட்டு பேசியுள்ளார்.
டிடிவி தினகரன் பணம் போடவில்லை
அமமுக உருவாக காரணம் தங்க தமிழ்ச்செல்வன், புகழேந்தி, செந்தில் பாலாஜி போன்றவர்கள்தான். தங்களது சொந்தப் பணத்தை போட்டு இவர்கள் கட்சியை வளர்த்தனர். ஆனால் ஒரு ரூபாய் கூட டிடிவி தினகரன் போடவில்லை. நான் தங்க தமிழ்ச்செல்வன் பின்னால்தான் இருந்தேன். நான் அக்கட்சியில் இருந்து விலகியபோது, இந்த கூடாராம் காலியாகும் என்று சொன்னேன். அதேபோலத்தான் இப்போது காலியாகிவிட்டது. இவ்வாறு கர்ணணன் தெரிவித்துள்ளார்.
காரணம் இதுதான்
திடீரென எதற்காக, பேடித்தனமான அரசியல் செய்யாதீர்கள் என்று, தினகரனின் உதவியாளரிடம், தங்கத் தமிழ்ச் செல்வன் போனில் பேசினார் என்ற, சந்தேகம் கட்சியினருக்கு எழுந்த நிலையில், கர்ணன் கூறியுள்ள இந்த தகவல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.