ஓஹோ.. இப்படி ஒரு விஷயம் இருக்கா.. "தங்கமே" உன்னைத்தான் தேடி வந்தேனே.. கலக்கிய திமுக.. பரபர பின்னணி!
தங்க தமிழ்செல்வனுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட முக்கிய காரணம் சொல்லப்படுகிறது
சென்னை: தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தங்க தமிழ்செல்வனுக்கு மாவட்ட செயலாளராக புதிய பொறுப்பினை தந்துள்ளது திமுக தலைமை.. இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? இந்த புதிய பொறுப்பினால் திமுகவுக்கு பலம் கூடுமா?
தேனி எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்றே பெயர் வாங்கியுள்ளதுடன், திமுகவினால் அந்த தொகுதியில் முழுவதுமாக கால் ஊன்ற முடியாத சூழலும் உள்ளதை கடந்த கால அரசியல் நமக்கு உதாரணமாக காட்டி வருகிறது.
இன்றைய சூழலில், எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும், இளம்வயது எம்பி ரவீந்திரநாத் அரவணைத்து செல்கிறார் என்ற நற்பெயர் கிடைத்து வருகிறது. மேலும், இவரது செயல்பாடுகள் பாஜகவுக்கு திருப்திகரமாக அமைந்து வருகிறது. இதைதவிர, தேனி தொகுதியின் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டி வருவதும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
அக்.7-ல் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு உறுதி? சென்னைக்கு வர அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு திடீர் உத்தரவு
ஸ்டாலின்
அதனால்தான், தேனியில் உள்ள தன் ஆதரவை மொத்தமாக திமுக பக்கம் அள்ளி கொண்டு வர வேண்டும் என்பதுதான் ஸ்டாலினின் திட்டம் என்றும், அதற்காகவே தங்க தமிழ்செல்வனுக்கு கொ.ப.செ. பதவி தரப்பட்டதாகவும் அன்று சொல்லப்பட்டது. ஓபிஸ்க்கு இருக்கும் அதே ஆதரவு தங்க தமிழ்செல்வனுக்கும் இருந்து வந்தாலும், அதிமுக, அமமுக, இப்போது திமுக என தாவி, தாவி கொண்டிருப்பவர் மீது தொகுதி மக்களுக்கு நம்பகத்தன்மை குறைந்துவிட்டது என்கிறார்கள்.
பொறுப்பாளர்கள்
இப்போதைக்கு நிர்வாக வசதிக்காக தேனி 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.. கம்பம், ஆண்டிப்பட்டி ஆகிய இரண்டு தொகுதிகள் அடங்கிய தேனி தெற்கு மாவட்டத்திற்கு கம்பம் ராமகிருஷ்ணன் பொறுப்பாளராகவும், போடிநாயக்கனூர், பெரியகுளம் தொகுதிகளை உள்ளடக்கிய தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
செல்வாக்கு
கம்பம் ராமகிருஷ்ணனை பொறுத்தவரை ரொம்பவும் சீனியர்.. இவருக்கென தனி செல்வாக்கு தேனியில் உள்ளது. இடையில், வேறு கட்சிக்கு சென்றுவந்தாலும் திரும்பவும் திமுகவில் மாவட்ட செயலாளர் பதவியை பிடிக்க முடிந்தது என்றால், இவரது கடந்த கால அரசியல் செயல்பாடுகள்தான் காரணம்.. அதுமட்டுமல்ல, மறைந்த கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவர்... அதனால் அவரை பதவியில் இருந்து எடுத்துவிட்டு, தமிழ்ச்செல்வனுக்கு மொத்தமாக பொறுப்பு கொடுத்தால் அது சரியாக இருக்காது என்று கட்சி மேலிடம் நன்றாகவே உணர்ந்துள்ளது.. அதனால்தான், இப்படி 2 ஆக பிரித்து ஆளுக்கொரு பொறுப்பை தந்துள்ளதாக சொல்கிறார்கள்.
மாவட்ட செயலாளர்
ஆனால், செந்தில் பாலாஜிக்கு எப்படி கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி தரப்பட்டதோ அப்படி, தனக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.. கட்சியில் சேர்ந்தபோது கொ.ப.செ. பதவி வழங்கியதால், இவரது செயல்பாடுகள் பெரிய அளவில் வெளியே இவ்வளவ நாள் தெரியவே இல்லை.
தாய்க்கழகம்
இந்த சமயத்தில், வேறு ஒரு தகவல் கசிந்து வந்தது.. அதாவது, அதிமுகவில் இப்போதைக்கு குழப்பமான சூழல் பகிரங்கமாகவே நடந்து வருவதால், பேசாமல் தாய்க்கழகத்துக்கே திரும்பி விடலாம்.. திமுகவில் எப்படியும் பெரிய பொறுப்பு தரப்போவது இல்லை என்று ஒருசிலர் இவர் காதை கடித்தார்களாம்.. ஆனாலும், தங்க தமிழ்செல்வன் ஸ்டாலின் மீதான அபரிமிதமான நம்பிக்கையால் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்.
பொறுப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தான் பெரிதும் எதிர்பார்த்து வந்த புதிய பொறுப்பு கிடைத்துள்ளது.. இந்த பொறுப்பை கொடுக்க சொன்னதே திமுகவின் ஐபேக் நிறுவனம்தான் என்கிறார்கள்.. இதற்கு காரணம், அதிமுகவுக்குள் மல்லுக்கட்டி வரும் ஓபிஎஸ்-ஸை எதிர்க்க சரியான ஆள் இவர்தான் என்றும், அதிமுக அதிருப்தி ஓட்டுக்கள் தங்களுக்கு சாதகமாக விழும் வாய்ப்பு உள்ளதாகவும் முழுமையாக நம்புகிறது திமுக.
காலங்காலமாக அதிமுகவின் கோட்டையான தேனியை நிச்சயம் "தங்கம்" கட்டி இழுத்து திமுக பக்கம் கொண்டு வந்து விடுவார் என்ற அதீத நம்பிக்கையே இந்த பொறுப்பு தரப்பட அடிப்படை என்கிறார்கள்!