கீழடியில் அருங்காட்சியகம்.. பட்ஜெட்டில் அறிவிக்காதது ஏன்? சென்னையில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
Recommended Video
சென்னை: கீழடியில் எதற்காக அருங்காட்சியகம் அமைக்கும் அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிடவில்லை என்பது பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பதில் தெரிவித்தார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சிறு குறு தொழில் அமைப்புகள், பொருளாதார வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், பட்டய கணக்காளர்கள் போன்ற அனைத்து தரப்பையும் சந்தித்து இந்த பட்ஜெட்டில் என்று சொல்லி உள்ளோம், அதில் ஏதாவது விளக்கம் வேண்டுமா என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறேன்.
நேற்று மும்பையில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்தி விட்டு இன்று சென்னையில் நடத்தியுள்ளேன். அடுத்ததாக கொல்கத்தாவில் ஆலோசனை கூட்டம் நடத்தி விட்டு டெல்லி செல்ல உள்ளேன். மேலும் பல நகரங்களிலும் இதுபோன்ற ஆலோசனை கூட்டங்களை பின்னர் நடத்துவோம்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்கும்போது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை மட்டும் குறிவைத்து நிதியை நிறுத்துங்கள் என்று நாங்கள் சொல்வது கிடையாது. தமிழகத்தை மட்டும் தனிப்படுத்தி கொடுக்காமல் இருப்போம் என்று கூறுவது சரியில்லை. இரண்டு தவணை நிலுவைத்தொகை தரப்படாமல் இருக்கிறது. அது அனைத்து மாநிலங்களுக்குமான நிலுவைத் தொகை. விரைவில் அதை வழங்குவோம். 2017 18 ஆம் நிதியாண்டில் உள்ள நிலுவைத் தொகை இதுவாகும்.
எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வது பற்றி பல குழப்பம் நிலவுகிறது. இந்த பங்குகளை பொது மக்களுக்குத்தான் வழங்க இருக்கிறோம். எத்தனை சதவீதம் பங்குகளை வழங்க உள்ளோம் என்பது இன்னும் தெரிவிக்கவில்லை. மிஞ்சிப்போனால் 10% பங்குகள் பொதுமக்களிடம் செல்லும். நமது நாட்டின் மிகப்பெரிய ஒரு நிறுவனத்தில் நாமும் ஒரு பங்குதாரர் என்ற உணர்வு பொதுமக்களுக்கு வரும். எனவேதான் எல்ஐசி பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் முடிவை எடுத்துள்ளோம்.
சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று ஏன் நான் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டேன் என்பது பற்றி நாடாளுமன்றத்தில் நான் பதில் கொடுக்கும்போது கேளுங்கள் விளக்கமாக சொல்கிறேன். ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்துவிட்டு, கீழடியில் ஏன் அமைக்கவில்லை என கேட்கிறீர்கள். நாடு முழுக்க மொத்தம் 5 இடங்களில் இவ்வாறு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதில் ஆதிச்சநல்லூரும் ஒன்று. அந்தந்த மாநிலங்களிடம் கலந்து ஆலோசித்துவிட்டுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டோம். கீழடியில், தமிழக அரசு, அருங்காட்சியகம் அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.