சென்னை தண்ணீர் பிரச்சனை.. ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் பதிலில்லை.. ஸ்டாலின் காட்டம்
சென்னை: கடுமையான தண்ணீர் பற்றாக்குறையில் சிக்கியுள்ள தலைநகரான சென்னையின் அவல நிலைக்கு, உரிய காரணம் என்ன என்பது குறித்து தமிழக அரசிடம் சரியான பதில் இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாநிலம் முழுவதுமே தண்ணீர் பிரச்சனை இருந்தாலும், தலைநகர் சென்னையில் அதீத மக்கள் தொகை காரணமாக சிக்கல் இன்னும் அதிகமாகியுள்ளது. சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கிய செம்பரம்பாக்கம், புழல், வீராணம் உள்ளிட்ட ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டதால், அதற்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறைக்கு மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சாதாரண டீ கடை வரை பாதிப்பை சந்தித்துள்ளன.
இதில் உச்சகட்டமாக சென்னையில் உள்ள சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்களை, தற்காலிகமாக மூட ஆலோசிக்கப்பட்டு வருகிறது இருப்பினும் பல இடங்களில் உணவகங்களில் சமைக்கவும், பாத்திரங்கள் கழுவவுமே தண்ணீர் பத்தாததால் மதிய உணவு சேவை நிறுத்தபட்டுள்ளது.
நகரில் உள்ள மிகப்பெரிய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க முடியாததால், வீட்டிலிருந்தே பணி செய்து தர கூறிவிட்டன. சென்னையில் இப்படி உச்சகட்ட ஆட்டத்தை நிகழ்த்தி வருகிறது தண்ணீர் பற்றாக்குறை.
இதனிடையே சென்னை நகரின் அவலநிலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் தண்ணீர் இல்லாமல் பள்ளிகள், பல உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன.
https://twitter.com/mkstalin/status/1139829308682149888
மேலும் ஐ.டி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இல்லத்தில் இருந்தே வேலை செய்ய பணித்துள்ளன. இந்த மாதிரியான ஒரு அவல நிலைமை சென்னைக்கு வந்தது ஏன்?, இதற்கெல்லாம் ஊழலில் நீந்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியிடம் பதில் இல்லை என கடுமையாக சாடியுள்ளார்.
தாம் ஏற்கனவே விடுத்த வேண்டுகோளை ஏற்று திமுகவினர் ஆங்காங்கே குடிநீர் விநியோகம் செய்வதாக வருவது ஆறுதலாக உள்ளது. இருப்பினும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை தங்களால் மேலும் இயன்றவரை முனைப்புடன் நிறைவேற்ற கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டு கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று குடிநீர் பற்றாக்குறை பற்றி முகநூலில் கருத்து பதிவிட்டிருந்த ஸ்டாலின் தமிழக மக்கள் குடிநீருக்கு அலைய காரணமான உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தவறினால், முதலமைச்சர் உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்து குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.