ஒரு தொகுதி வேட்பாளர் அறிவிப்புக்கே இத்தனை குழம்பும் அதிமுக.. 39 தொகுதிகளுக்கு நாக்கு தள்ளிடும் போலயே
சென்னை: திருவாரூர் தொகுதிக்கு அதிமுக வேட்பாளர் அறிவிப்பதில் இத்தனை குழப்பங்களா என நினைக்க தோன்றுகிறது. இன்னும் 39 எம்பி தொகுதிகளுக்கும் தேர்தல் என்றால் அவ்வளவுதான் போல.
திருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர் தேர்வு என அனைத்து கட்சிகளுக்கும் மும்முரம் காட்டி வந்தன. இந்நிலையில் முதல் வேளையாக நாம் தமிழர் கட்சியின் சீமான் வேட்பாளரை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தினகரன் அறிவித்தார். பின்னர் திமுக சார்பில் வேட்பாளர் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு விட்டார். இதைத் தொடர்ந்து அதிமுகவின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஓரிரு நாட்கள்
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் கூறுகையில் அதிமுக வேட்பாளர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார்.
7 அல்லது 8 தேதிகளில்
அதிமுக எப்போதும் தேர்தலை கண்டு அஞ்சியதில்லை என்று கூறினார்கள். ஈபிஎஸ்- ஓபிஎஸ் கூறியபடி இன்னும் இரு நாட்களில் வேட்பாளர் அறிவிப்பு என்றால் ஜனவரி 7 அல்லது 8 தேதிகளில் அறிவிக்கப்படுவார் இந்த நிலையில் திருவாரூரில் ஒரு கோயிலில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் 10-ஆம் தேதி அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அதாவது வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான அன்றே அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.
மாறுபட்ட கருத்து
தேர்தலை நடத்துவதற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார் தம்பிதுரை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஒரு கருத்து சொல்ல , தம்பிதுரையோ மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா முடித்து விடுவார்
அதிமுகவுக்குள் ஏன் இத்தனை குழப்பம் நீடிக்கிறது என்றே தெரியவில்லை. ஜெயலலிதா இருந்த போது தேர்தல் என அறிவிக்கப்பட்டு விட்டால் எல்லாருக்கு முன்பே அதிமுக தேர்த்ல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வேட்பாளர் அறிவிப்பு என அனைத்தையும் ஜெயலலிதா முடித்து விடுவார்.
விசாரணைக்கு
ஆனால் இன்றோ நாம் தமிழர் கட்சி கூட முன்கூட்டியே வேட்பாளரை அறிவித்த நிலையில் பாரம்பரிய கட்சியான அதிமுகவுக்கு ஏன் இத்தனை குழப்பம்? ஒரு வேளை அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டு திருவாரூர் தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்த வழக்கு வரும் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
குழப்பம்
எனவே அன்றைய முடிவுகளை பார்த்துவிட்டு அப்புறம் அறிவிக்கலாம் என அதிமுக எண்ணியிருக்கலாம் என தெரிகிறது. எது எப்படியிருந்தாலும் ஒரு இடைத்தேர்தலுக்கே இத்தனை குழப்பம் என்றால் 39 எம்பி தொகுதிகளுக்கும் தேர்தல் வைத்தால் அதிமுகவுக்கு நாக்கு தள்ளிடும் போலயே.