திருமாவளவன் காலில் தண்ணீர் படாமல், நாற்காலி மீது நிற்க வைத்து.. வெடித்த சர்ச்சை..வன்னியரசு விளக்கம்
சென்னை: மழை நீரில் கால் படாமல் இருப்பதற்காக, இரும்பு சேர் மீது திருமாவளவன் நிற்பதும் அவரது தொண்டர்கள் அந்த சேரை இழுத்து கொண்டே செல்வதுமான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
திருமாவளவனின் இந்த செயல் குறித்து, சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அந்தக் கட்சியின் வன்னியரசு இதுதொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.
Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேளச்சேரியில் வசித்து வருகிறார்.
முழங்கால் அளவு
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் டிப்டாப் உடை அணிந்து காலில் ஷூ அணிந்தபடி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது முழங்கால் அளவுக்கு தரை தளம் பகுதியில் தண்ணீர் தேங்கி இருப்பதை பார்த்து திகைத்தார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் அவரை தங்களது தோளில் தூக்கி செல்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் இதை திருமா ஏற்கவில்லை. மறுத்துவிட்டார்.
இரும்பு நாற்காலிகள்
இதையடுத்து, அங்கே சில இரும்பு நாற்காலிகள் ஒன்றாக கோர்த்து வைக்கப்பட்டிருந்ததை தொண்டர்கள் கவனித்தனர். காத்திருப்பவர்கள் அமர்வதற்காக இது போன்ற நாற்காலிகள் அங்கு இருந்தது. அந்த நாற்காலிகளை பயன்படுத்தி திருமாவளவன் மீது தண்ணீர் படாமல் அழைத்துவர முயற்சி செய்த தொண்டர்கள் அதன் மீது திருமாவளவனை ஏறுமாறு கூறினார். திருமாவளவனும் ஏறி நின்றார்.
தள்ளிச் சென்ற தொண்டர்கள்
அந்த இரும்பு நாற்காலியை தொண்டர்கள் தள்ளிக் கொண்டே வந்தார்கள் பிறகு கார் நிற்கும் இடம் வரை அந்த நாற்காலியில் திருமாவளவன் நின்றுகொண்டே வந்தார். தொண்டர்கள் தள்ளிக் கொண்டு வந்தார்கள். இதையடுத்து திருமாவளவன் காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாஜகவினர் விமர்சனம்
சமத்துவம் என்ற கொள்கை கொண்ட திருமாவளவன் தன்னைப் பிறர் சுமக்க அனுமதிக்கலாமா, காலில் தண்ணீர் பட்டால் என்னாகிவிடும் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்விகளை முன்வைத்தனர். குறிப்பாக பாஜக பிரமுகர்கள் நேரடியாக இந்த விஷயத்தை கையில் எடுத்து திருமாவளவனை தாக்கி பதிவுகள் போட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது.
வன்னியரசு விளக்கம்
வேளச்சேரியில் மருதம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள ஓர் அறையில் தான் எமது தலைவர் திருமாவளவன், கடந்த15 ஆண்டுகளாக தங்கி வருகிறார்.கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையில் எப்படி கீழ்த்தளம் முழுக்க தண்ணீர் புகுந்ததோ,அப்படி தான் இந்த ஆண்டும்.
ஒரு தலைவர் நினைத்தால் சொகுசு ஓட்டலில் கூட தங்கலாம்.ஆனால் அதையெல்லாம் விடுத்து தம்பிகளோடவே தங்குகிறார்.முழங்கால் அளவு தண்ணீரில் தலைவர் நடக்கக்கூடாது என்பதற்காக நாற்காலிகளை போட்டு உதவுகிறார்கள் தம்பிகள். இது கூட பொறுக்க முடியாத அரசியல் வன்மத்தர்களும் அறிவு பலவீனமானவர்களும் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள். இவ்வாறு வன்னியரசு தெரிவித்துள்ளார்.
கொள்கை விளக்கம்
வன்னியரசு விளக்கம் கொடுத்தாலும் நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. பணத்திற்காக கூட மனிதனை மனிதன் ரிக்ஷாவில் சுமக்கக் கூடாது என்று தான் கை ரிக்ஷாவை ஒழித்தார் கருணாநிதி. தன் காலில் விழுவதை பெரியார் அனுமதிக்கமாட்டார். இதுதான் கொள்கை பிடிப்பு என்று திமுக ஆதரவாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஷூ நனையாமல்
இதே வேறு கட்சியினர் செய்து இருந்தால் நீங்கள் என்னவெல்லாம் பேசி இருப்பீர்கள் இப்போது மட்டும் காரணம் சொல்கிறீர்களே என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர், திமுகவைச் சேர்ந்தவரான, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வுக்கு சென்ற போது அவரை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு காலில் தண்ணீர் படாமல் வெளியே கொண்டு விட்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளனர். இருப்பினும் திருமாவளவன் காலில் வீக்கம் இருப்பதால் தண்ணீர் படுவதை தவிர்த்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.