துப்பாக்கிச் சூடு.. போலீஸ் விதி மீறியது என்றேன்.. முதல்வர் மறுக்கிறார்.. கே.ஆர். ராமசாமி
சென்னை: "தூத்துக்குடியில் வேன் மீது ஏறி ஏன் சுட்டார்கள், விதிமீறி இருக்கிறீர்களே என்று நான் அவையில் கேட்டேன். அதற்கு முதல்வர், வேன் மீது ஏறி என்று சொல்வது கற்பனை கதை என்கிறார். அப்படியானால் இவர்களின் நோக்கம் தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றில்லை. எல்லாவற்றையும் மறைப்பதற்குதான் திட்டமிட்டுள்ளார்கள்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கேஆர் ராமசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ கேஆர் ராமசாமி விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், "மக்களின் நியாயமான போராட்டங்களை அடக்குமுறை பயன்படுத்தி அடக்கி ஒடுக்குகிறார்கள்.
இது போன்ற மக்களின் நியாயமான போராட்டங்களை கலைக்க என்ன விதி உள்ளதோ அப்படித்தான் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால் விதிமீறி இருக்கிறீர்கள் என்று சொன்னேன். அப்போது முதல்வர் பழனிச்சாமி விதியை மீறவில்லை என்று சொன்னார்.
தூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி
எப்படி துப்பாக்கிச்சூடு
அப்போது நான் விதிமீறி காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். ஒரு வேன் மீது ஏறி நின்று மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். அவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டும் என்று விதியில்லை. துப்பாக்கிச்சூடு எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கு தெளிவாக சட்டம் இருக்கிறது.
முழங்காலுக்கு கீழ் சுடணும்
அதைத்தான் நீங்கள் பின்பற்றி இருக்க வேண்டும். ஒருவரை சுட வேண்டும் என்றால், அவரை முழங்காலுக்கு கீழே சுட வேண்டும். இதுபோன்ற ரைபிள் புல்லட்டுகளை பயன்படுத்தக்கூடாது. ரப்பர் புல்லட்டுகளை பயன்படுத்தி இருக்க வேண்டும்.
ஷாட் கன் துப்பாக்கி
நீங்கள் ஷாட் கன் என்ற துப்பாக்கியைத் தான் பயன்படுத்தி இருக்க வேண்டும் என நான் தெளிவாக கேட்டேன். தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண்ணின் மீது உதட்டில் சுட்டார்கள் என்று சொன்னேன். அப்போது முதல்வர் பழனிச்சாமி குறுக்கிட்டு பேசியதுடன், வேன் மீது ஏறி நின்று சுட்டதாக சொல்வது கற்பனை கதை என்றார்.
வேனில் நின்று துப்பாக்கிச்சூடு
அதற்கு நான் ஒரு போலீஸ்காரர் மஞ்சள் நிற உடை அணிந்து வேன் மீது ஏறி நின்று துப்பாக்கியால் சுட்டுள்ளார். நீங்கள் விதியை மீறி இருக்கிறீர்கள் என்றேன். ஆனால் அத்துடன் அந்த பிரச்னையை பற்றி பேசாமல் அதோடு தொடர்புடையவேறு விஷயங்களை பேசினார். இவர்களின் நோக்கம் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் எல்லாவற்றையும் மறைப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள்" இவ்வாறு கூறினார்.