ஆதரவு எம்எல்ஏக்களை குற்றாலத்தில் பாதுகாக்க வேண்டிய அவசியம் திடீரென தினகரனுக்கு ஏன் தெரியுமா?
சென்னை: டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஏன் திடீரென குற்றாலத்தில் தங்க வைக்கப்படுகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுகவில் உள்ள தினகரன் அணிக்கு ஆதரவான 4 எம்எல்ஏக்கள் என மொத்தம் 22 பேர் இன்று இரவு குற்றாலத்திலேயே தங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை மறுநாள் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளதாக கூறப்படும் நிலையில் இன்று இவர்கள் குற்றாலத்தில் தங்குவது முக்கியத்துவம் பெறுகிறது.
டெல்லி மீது பயம்
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு வெளியானால் இவர்கள் எதற்காக குற்றாலத்தில் தங்க வேண்டும் என்ற கேள்வி சாமானியமாக எழக்கூடும். ஆனால் அங்குதான் டெல்லியின் கரங்கள் மீது டிடிவி தினகரனுக்கு, அச்சம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். ஒருங்கிணைந்த அதிமுகவால்தான் கணிசமான வாக்குகளை பெற முடியும், அதை வைத்து தமிழகத்தில் காலூன்றலாம் என்று கூட்டணிக் கணக்குப் போடுகிறதாம் பாஜக.
பாஜக திட்டம்
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தினகரன் அணியை எடப்பாடி அணியுடன் இணைத்துவிட்டு கட்சியை பலப்படுத்தி, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாஜக திட்டமிடுகிறது. ஆனால் முதல்வர் பதவி தினகரனுக்கு தரப்பட வேண்டும் என்பது இவர் தரப்பு நிபந்தனையாக முன் வைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு எடப்பாடி தரப்பு சம்மதிக்கவில்லை என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில்தான் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக உள்ளது.
அமைச்சர் பதவி
ஒருவேளை சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று, மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்தால், 18 எம்எல்ஏக்கள் முதல்வர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வாய்ப்பு இருப்பதால் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது. ஆனால் இதை தடுக்க எந்த எம்எல்ஏக்களில் ஒருசிலருக்கு அமைச்சர் பதவி தர எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சிலர் ஆசை வார்த்தை கூறி வருவதாக தெரிகிறது. இது பாஜக சொல்லி கொடுத்த திட்டம் என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.
முதல்வர் பதவி
அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு தன் பக்கம் உள்ள எம்எல்ஏக்கள் எதிர்முகாமிற்கு சென்று விடக்கூடாது, அப்படி போனால் தனது முதல்வர் பதவிக்கான நிர்பந்தம் கண்டுகொள்ளப்படாது என்று நினைக்கிறாராம் தினகரன். எனவே குற்றாலத்தில் திடீரென தனது ஆதரவு எம்எல்ஏக்களை நிறுத்தி வைப்பதற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏ, தங்கத் தமிழ்ச்செல்வன் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் நிர்பந்தத்திற்காக குற்றாலம் செல்லவில்லை. குளித்து விட்டு இரவு அங்கேயே தங்க வேண்டி இருப்பதால் தங்குகிறோம் என்று கூறினார்.