என்னாச்சு.. சசிகலா விடுதலையில் ஏதும் சிக்கல் இல்லையே.. கவலையில் அமமுக.. டெல்லி விரைந்த தினகரன்
டிடிவி தினகரனின் டெல்லி பயணம் பல சந்தேகங்களை எழுப்பி வருகிறது
சென்னை: சசிகலா விடுதலையில் ஏதோ சிக்கல் வரப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். இந்த நிலையில்தான் திடீரென டெல்லி பறந்த டிடிவி தினகரன் விஜயத்தால் அது மேலும் வலுவாகியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது தண்டனைக் காலம் முடிவடைவதையொட்டி நல்லெண்ண அடிப்படையில் விடுதலையாகும் காலம் நெருங்கி விட்டது.
ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் இப்போது ஒரு சிக்கல் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சசிகலா
அதாவது சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு தனியாக சமையல் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டதாகவும். சசிகலா, இளவரசி ஆகியோர் ஷாப்பிங் போய் வந்ததாகவும் பரபரப்பான புகார் எழுந்தது. இதுதொடர்பாக வீடியோக்களும் வெளியாகின. இதுதான் இப்போது சசிகலாவுக்கு எதிராக கையில் எடுக்கப்படுவதாக சொல்கிறார்கள்.
அதிகாரிகள்
இதுதொடர்பாக ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனால் அதில் சசிகலா லஞ்சம் கொடுத்து அதிகாரிகளை தன் பக்கம் மடக்கினார் என்று சொல்லப்படவில்லையாம். இப்போது அதைச் சேர்க்க முயற்சிகள் நடக்கிறதாம். முயற்சி செய்வது யார் என்று தெரியவில்லை.. ஆனால் சசிகலா வருகையை விரும்பாத சிலர்தான் டெல்லிக்கு அழுத்தம் கொடுத்து இதைச் செய்வதாக சொல்கிறார்கள்.
அதிர்ச்சி
இதனால் அமமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. சசிகலா பெயரை வழக்கில் சேர்த்து விட்டால் அவர் விடுதலையாக முடியாத நிலை ஏற்படும். குறைந்தது, அந்த புதிய வழக்கின் விசாரணை முடியும் வரை வெளியே வர முடியாது. இதைத்தான் அவரது எதிர்ப்பாளர்களும் விரும்புகிறார்களாம். அதாவது சசிகலா தமிழக சட்டசபைத் தேர்தல் முடியும் வரை வெளியில் வராமல் இருந்தால் நல்லது என்று இவர்கள் டெல்லி தரப்பிடம் அழாத குறையாக கோரிக்கை வைத்துள்ளனராம்.
பாதகம்
சசிகலா மட்டும் வெளியே வந்து விட்டால், அவரது சமுதாய ஓட்டுக்கள் மொத்தமாக பிரிந்து போகும் வாய்ப்புள்ளதாக அவரது எதிர்ப்பாளர்களில் ஒரு தரப்பு அஞ்சுகிறதாம். அப்படி நடந்தால் தங்களுக்குப் பாதகம் என்பது இவர்களின் கவலையாகும். எனவே அது நடக்காமல் இருக்க வேண்டுமானால் சின்னம்மா உள்ளேயே இருந்தால்தான் நல்லது என்று இவர்கள் பதறுகிறார்களாம்... இந்த சதி வேலைகளை முறியடிக்கும் வகையில்தான் தினகரன் டெல்லி போனதாக தகவல்கள் கூறுகின்றன. என்ன நடக்குதுன்னே புரியலையே!