இரு புதிய மாவட்டங்கள் உதயம்.. வேலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.. பின்னணி என்ன?
சென்னை: திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உதயமானதன் மூலம் வேலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.
தமிழகத்தில் 13 சட்டப்பேரவை தொகுதிகளையும் 2 மக்களவைத் தொகுதிகளையும் உள்ளடக்கியது வேலூர் மாவட்டம். இதன் மக்கள்தொகை 43 லட்சமாகும். இந்த மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 11 நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் உள்ளன.
150 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தினர் அனைத்து தேவைகளுக்காகவும் ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவது மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.
வேலைகள்
குறைகளை தீர்க்க ஏற்படுத்தப்பட்ட மாவட்ட ஆட்சியரகத்துக்கு தொலைவு காரணமாக வருவதே பெருங்குறையாக இருக்கிறது. முக்கிய அலுவலகங்கள் வேலூரில் இருப்பதால் நிறைய பயண செலவு செய்தும் அன்றைய தினத்தில் பல வேலைகள் முடிக்கப்படாமல் உள்ளது.
அரசு அலுவலர்கள்
7 லட்சம் மக்கள்தொகையை கொண்டுள்ள திருப்பத்தூரில் அரசு கல்லூரி என்பதே கிடையாது. அனைத்து தேவைக்கும் வேலூருக்கே வர வேண்டும். இதுபோல் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதற்காகவே தங்கள் கல்வி பாதிக்கப்படுவதாக மாணவ, மாணவிகளும் வேதனை தெரிவித்திருந்தனர். பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் அரசு அலுவலர்களுக்கும் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
3 மாவட்டங்களாக பிரிப்பு
எனவே வேலூரை இரண்டாக பிரித்து திருப்பத்தூரை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் அரசியல் கட்சிகளும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் சுதந்திர தினவிழாவில் வேலூரை 3 மாவட்டங்களாக பிரிக்க முதல்வர் அறிவித்துள்ளார்.
வேலூர் மக்களின் கோரிக்கை
அவர் கூறுகையில் வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படுகிறது என அறிவித்தார். இதன் மூலம் வேலூர் மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது.
அரசியல் பார்வையாளர்கள்
வேலூர் மாவட்ட மக்களோ இரண்டாக பிரிக்குமாறு கேட்டிருந்தனர். ஆனால் அரசோ 3-ஆக பிரித்து அவர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை வாரி வழங்கியுள்ளது. சமீபத்தில்தான் வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடந்தது. அதில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் கடுமையாக போராடி தோல்வியுற்றார். இந்த நிலையில் மாவட்ட பிரிவினை மூலம் மக்களை குஷிப்படுத்தியுள்ளது அதிமுக அரசு.