ஆச்சரியமா இருக்கே... விஜய் மீது மட்டும் அப்படி என்னதான் காண்டு பாஜகவுக்கு??
நடிகர் விஜய் மீது பாஜக தொடர்ந்து விமர்சிப்பது ஏன்?
சென்னை: ஜோசப் விஜய் மீது எச்.ராஜாவுக்கு ஏன்தான் இவ்வளவு பாசம் என்று தெரியவில்லை. எப்பவுமே விஜய்யை வம்பிழுத்து கொண்டிருக்கிறார்.
எச்.ராஜா மட்டுமில்லை தமிழிசையும்தான். ஏற்கனவே மெர்சல் படம் வந்தபோது எச்.ராஜா.. விஜய்யை ஜோசப் விஜய் என்று ஏன் சொன்னார் என்றே தெரியவில்லை. அவர் ஜோசப் விஜய் என்பதுதான் ஊர் உலகத்துக்கே தெரிந்த விஷயமாச்சே?
விஜய் தீவிரவாதியை போல மக்களை தூண்டுகிறார்.. சர்கார் பற்றி அமைச்சர் சிவி சண்முகம் கடும் விமர்சனம்!
மதசாயம் ஏன்?
சினிமா சம்பந்தப்பட்ட விஷயத்தில் மதச்சாயம் கொண்டு வந்து பூச முயன்றதால் எச்.ராஜாவுக்கு கிடைத்தது என்ன? இப்போது தமிழிசையும் "தேவையில்லாமல் சர்கார் பற்றி பேசி, அதை வெற்றிப்படமாக்க நாங்கள் விரும்பவில்லை" என்றார். மற்றொரு புறம் ராஜா, "கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா, நல்ல கதையா திருடுங்கடா" என்று பதிவிட்டுள்ளார்.
ஏன் இவ்வளவு காண்டு?
இதில் முக்கியமான சந்தேகம் என்னவென்றால், எச்.ராஜாவின் இந்த பதிவு உண்மையிலேயே அவருடையதுதானா? அல்லது வேறு யாரேனும் அட்மின் என்ற பெயரில் போட்டுவிட்டார்களா என தெரியவில்லை. ஒருவேளை பதிவு எச்.ராஜாவுடையதாகவே இருந்தால், மற்ற நடிகர்களைவிடவிஜய்யை மட்டும் விமர்சிக்க என்ன காரணம்? ஏன் விஜய் மீது இவ்வளவு "காண்டு" என தெரியவில்லை.
படத்தை ஓட வைப்பதா?
விஜய் கிறிஸ்துவர் என்ற அடிப்படையிலா? ஒருவேளை மத ரீதியாக மட்டும்தான் விமர்சிக்கப்படுகிறார் என்றால், சினிமாவிலும், அரசியிலிலும் நிறைய கிறிஸ்தவ நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை யாரும் இதுவரை எதுவும் சொன்னதும் கிடையாது, மோசமாக விமர்சித்ததும் கிடையாது. ஆனால் விஜய் படம் வரும்போதெல்லாம் தொடர்ந்து பாஜக வம்புக்கு இழுப்பதால் பெரிசா என்ன கிடைத்துவிட போகிறது. சுமாரா ஓடக்கூடிய படத்தை நல்லா ஓடவைப்பது, நல்லா ஓட வேண்டிய படத்தை இன்னும் நல்லா ஓட வைப்பது... இதுதான் நடந்து வருகிறது.
சகிப்புத்தன்மை இல்லையே?
எந்த சின்ன விஷயத்தை கூட பெரிதாக்கி காட்டும் மனப்போக்கு பாஜவுக்கு நிறையவே இருக்கிறது. எச்.ராஜாவும், தமிழிசையும் தாங்கள் மீது ஒரு சிறு விமர்சனத்தை வைத்தாலும் அதை தாங்கி கொள்வதில்லை. இப்படி சினிமா பிரமுகர் மீது மத சாயத்தை பூசுவது பாஜகவுக்கு இழுக்கு என்பதும், இந்துக்களே இது போன்ற வெறுப்பு அரசியலை கண்டு அதிருப்தி அடைவார்கள் என்பதும் இந்த தலைவர்களுக்கு தெரியாமல் உள்ளது ஆச்சரியமாக உள்ளது.
கடம்பூர் ராஜூ
ஏற்கனவே ஆர்.கே. நகரில் டெபாசிட் வாங்க முடியாமல், தாமரையும் மலர முடியாமல் இருக்கும் நிலையில், இப்படி மத ரீதியான சாயங்களை பூசி வருவது பாஜகவுக்கு பின்னடைவாகத்தான் இருக்கும். ஏற்கனவே தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, "இந்த படத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் நிறைய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருக்கிறது, அதனால் இதை படக்குழுவே நீக்கிவிட்டால் நல்லது, இல்லையென்றால் முதல்வர் இதில் தலையிட வேண்டியது வரும்" என்று சொல்லிவிட்டார். ஆனாலும் முதல்வர் உட்பட எதுவுமே பேசாமல் இருக்கின்றனர்.
எதிர் வினையாகிறது
அதற்கு காரணம், எதையாவது பேசப்போய் படம் இன்னும் ஹிட் ஆகிவிடும் என்றுகூட நினைக்கலாம். இப்படி நினைத்து பாஜகவும் இந்த சர்க்கார் படத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதை விட்டுவிட்டு, ஹிட் ஆக்கி கொண்டிருப்பது விஜய் ரசிகர்களைதான் குஷிப்படுத்தி கொண்டு இருக்கிறது. எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம், விமர்சிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, இப்படி கருத்துக்களை பதிவிட்டு வருவது சம்பந்தப்பட்டவர்களுக்கே எதிராக போய், வினையில் முடிந்து விடுகிறது என்பதை இனியாவது நினைத்து பார்க்க வேண்டும்.
வேரூன்றி விட்டது
தவிர, விஜய் படம் ரிலீஸானாலே அதை ஹிட்டாக்க தமிழக பாஜக துணை இருக்கிறது என்ற நம்பிக்கையை விதைத்துவிட கூடாது!! மற்றொன்று, எந்த மத சாயத்தை யார் மீது பூசினாலும் கலையை கலையாகவும், அரசியலை அரசியலாகவும் பார்க்கும் மனோபாவம் நம் மக்களிடம் ஆழமாக வேரூன்றியே இருக்கிறது. அதனை எத்தனை ட்வீட்கள் போட்டாலும் அழிக்கவோ, அசைக்கவோ முடியாது
பாஜக இருக்கிறது
தற்போது திரையுலகில் என்ன பேசிக் கொள்கிறார்கள் தெரியுமா.. பாஜகவினர் வாயில் விழுந்தால் போதும், படம் சூப்பர் ஹிட் என்றுதான். எனவே அதற்கேற்ப படத்தில் சர்ச்சைகளை வலிந்து திணிக்கவும் பலர் தயாராகி விட்டனர். அந்த அளவுக்கு பாஜகவின் புகழ் ஓங்கி வியாபித்து எழுந்து நிற்கிறது.!