ஸாரி கேட்டாரா.. அதான் கட்சியில சேர்த்துக்கிட்டோம்.. ஓ.ராஜா குறித்து ஜெயக்குமார் குபீர் கருத்து!
சென்னை : செய்த தவறுக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்த காரணத்தால் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சில நாட்களுக்கு முன்பு அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். மணல் கொள்ளை, அரசு ஒப்பந்த பணிகளில் தலையீடு, டிடிவி தினகரனிடம் காட்டிய நெருக்கம் காரணமாகவே அவர் கட்டம் கட்டப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், நீக்கப்பட்ட அதே வேகத்தில் ஓ. ராஜா தற்போது அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டார். அதிமுகவின் இந்த நடவடிக்கை அனைவரிடையே பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந் நிலையில், செய்த தவறுக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்த காரணத்தால் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இதை தெரிவித்தார். இதுகுறித்து ஜெயக்குமார் கூறுகையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.ராஜா, தான் செய்த தவறுக்கு நேரிலும், கடிதம் மூலமாகவும் வருத்தம் தெரிவித்த காரணத்தால் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்.
மறப்போம், மன்னிப்போம் என்ற அடிப்படையிலேயே இணைத்துள்ளோம். இது சசிகலா, தினகரன் குடும்பத்தார் தவிர்த்து அனைவருக்கும் பொருந்தும். மேலும் கஜா புயல் நிவாரண பணிகள் சரியாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு தற்போது தமிழக அரசிடம் உள்ள பேரிடர் நிதியினை பயன்படுத்தி கொள்ள கூறியிருக்கிறது.
கஜா புயல் நிவாரணநிதியாக தமிழக அரசு முன்வைத்த நிதியை கண்டிப்பாக பெற்றே தீரும். தமிழகத்தில் எப்போதும் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் தான். எந்த வடிவில் வந்தாலும் ஹிந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். இடைநிலை ஆசிரியர்களுடனான பேச்சுவார்த்தையில் மிகத் தெளிவாக அரசின் நிலைமையை எடுத்து கூறினோம். எந்த இடத்திலும் அரசு அவர்களை உதாசீனப்படுத்தவில்லை.
எனவே, அரசின் நிலைமைகளை இடைநிலை ஆசிரியர்கள் புரிந்துகொண்டு போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும். அந்த அறிக்கையை வெளியிட முடியாது என்றார் அவர்.