உங்கள் முடி ஏன் வெள்ளையாக மாறிவிட்டது? தமிழக பாஜக பிரமுகரிடம் கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி
சென்னை: ‛‛உங்கள் முடி ஏன் வெள்ளையாக மாறிவிட்டது'' என தன்னிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந் நிகழ்ச்சியில் பல்வேறு திட்ட பணிகளை துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் பணிகள் முடிந்த திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். இந்த திட்ட பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.31,400 கோடியாகும்.
நீட் தேர்வு, 16 முறை ஒன்றிய அரசு, திராவிட மாடல்-விமர்சனங்களை துவம்சம் செய்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு
முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இந்த விழாவில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். விழாவில் ஸ்டாலின் பேசும்போது, ‛‛கச்சதீவை மீட்க வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும். அலுவல் மொழியாக தமிழ் அங்கீகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கும்,பொருளாதாரத்துக்கும் தமிழகம் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்'' என்றார்.
பிரதமர் மோடி பேச்சு
இதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், ‛‛தமிழ்நாடு வருவது எப்போதும் மகிழ்ச்சிக்கு உரியது. தமிழ்நாட்டு மக்களின் கலாசாரம் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை. ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்தவராக உள்ளார். இலங்கை கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. இந்த சூழல் நிச்சயமாக உங்களுக்கு கவலையை தரும். ஒரு நெருங்கிய நண்பனாகவும், அண்டை நாடாகவும் இந்தியா இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வருகிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி மலையக தமிழர்கள் உட்பட அந்நாட்டில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு தனி நபர்கள், இந்திய அமைப்புகள் உதவி செய்துள்ளனர்'' என்றார்.
முடி ஏன் வெள்ளையாக மாறியுள்ளது
அதன்பிறகு நரேந்திர மோடி மேடையில் இருந்து இறங்கி சென்றார். அப்போது சில பாஜக நிர்வாகிகள் அவரை சந்தித்தனர். இந்நிலையில் பாஜகவின் துணை தலைவர் நாராயணன் திருப்பதி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்ததாக கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛இன்று நான் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். அனைத்தும் நன்றாக இருக்கிறதா? என அவர் என்னிடம் கேட்டதோடு உங்கள் முடி ஏன் வெள்ளையாக மாறியுவிட்டது? என்றும் வினவினார். நான் பேசாமல் இருந்தேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசு மீது விமர்சனம்
மேலும் அவர் திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛பொறுப்புள்ள முதல்வர் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய ஒரு நிகழ்ச்சியில் பொறுப்பற்று பேசுவதற்கு பெயர் தான் திராவிட மாடலா?. ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என்று பலமுறை கூறி புளங்காகிதம் அடைந்தது ‛குன்றிய' அரசு. அப்போது கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு இப்போது அதை மீட்க வேண்டும் என கூக்குரலிடுவது தான் திராவிட மாடலா?. குடியை கொடுத்து குடியை கெடுத்தது தான் திராவிட மாடல்'' என கடுமையாக விமர்சித்துள்ளார்.