தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை... மக்கள் மகிழ்ச்சி
சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், வெப்பச் சலனத்தால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
கத்திரி வெயில் விடைபெற்ற போதிலும், வெப்பத்தின் தாக்கம் குறைந்தபாடு இல்லை. மழை இல்லாததால், நீர் நிலைகள் வறண்டு போய் காணப்படுகின்றன. இதனால், குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கிராம மக்கள் குடிநீர் தேடி அலைந்து வருகின்றனர்.
இந்தநிலையில், நாமக்கல் நகர் பகுதிகளான கொண்டிசெட்டிப்பட்டி, சந்தைபேட்டி புதூர், முதலப்பட்டி, கொசவம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
இதே போல், நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை உட்பட பகுதிகளிலும் ஒரு மணி நேரமாக காற்றுடன் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், குடிநீர் தட்டுப்பாடு தொடர்ந்து நிலவி வருகிறது. தற்போது பெய்து வரும் மழை தொடர்ந்தால், குடிநீர் தட்டுப்பாடு குறையும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
இதற்கிடையே, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இது புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இந்த தாழ்வு நிலை, அடுத்த 48 மணிநேரத்தில் தென்கிழக்கு, கிழக்கு மத்திய பகுதிகளில் நகர்ந்து வருகிறது.
இது மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதியில் நகர்ந்து புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் லட்சத்தீவு, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புதிய புயல் சின்னத்தால், கடலோர கர்நாடகா, கோவா, அசாம், மேகாலயா மற்றும் திரிபுராவில் அடுத்த 3 தினங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் மெல்ல மெல்ல வெயிலின் தாக்கம் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.