தமிழகத்தில் பரவலாக மழை... வெப்பம் தணிந்தது... மக்கள் மனம் குளிர்ந்தது
சென்னை: தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததை அடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும். அதன்படி, இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கியுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் மழை பெற்று வருகிறது.
அதே நேரம், கத்திரி வெயில் முடிந்த பிறகும், வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், ஒலக்கூர், சாரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு திண்டிவனத்தில் மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.
மதுரை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. குறைந்து காணப்படும் வைகை அணை நீர்மட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை, திருவரங்குளம், மழையூர், அன்னவாசல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே மின்னல் தாக்கியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். பெருவேலி பகுதியை சேர்ந்த சௌமியா, சசிகலா, வைதேகி ஆகியோர் நேற்று மாலை, அங்குள்ள மலையடிவார பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் சௌமியா பலியானார். சசிகலாவும், வைதேகியும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இருவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல், குறிஞ்சிப்பாடி அருகே மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் தையல்குணாம் பட்டினத்தை சேர்ந்த வீரம்மாள், சித்ரா, சடகோபன் ஆகியோர் விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் வீரம்மாள் பலியானார். சித்ராவும், சடகோபனும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், காலாப்பட்டு, கிருமாம்பாக்கம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் ஒருசில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னையை பொறுத்தவரை வருகின்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனக் கூறப்பட்டுள்ளது.