விரட்டி துரத்திய சந்தேக புத்தி.. மனைவி தலையில் கல்லை போட்டு கொலை.. கணவரும் தற்கொலை
மனைவியை கொன்று கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: சந்தேகம்.. சந்தேகம்.. விரட்டி துரத்திய சந்தேக புத்தியால் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார் ஒருவர்!!
புளியந்தோப்பு திருவிக நகரை சேர்ந்த தம்பதி துக்காராம்-தாராபாய். துக்காராம் ஒரு செருப்பு கடையிலும், தாராபாய் ஒரு காய்கறி கடையிலும் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
நல்லாதான் வாழ்க்கை போய்ட்டு இருந்தது.. திடீரென்று 43 வயதான துக்காராமுக்கு 33 வயதான மனைவியின் நடத்தை மீது சந்தேகம் வந்துவிட்டது. அதனால் வீட்டில் எப்ப பார்த்தாலும் சண்டை, தகராறு, கூச்சல், அடி-தடிதான்!! ரொம்ப சண்டை அதிகமாகிவிட்டால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து சமாதானப்படுத்தி விட்டு செல்வார்கள்.
நேற்று ராத்திரியும் வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு தூங்கபோகிற நேரத்தில் மறுபடியும் தகராறு ஆரம்பமானது. சண்டை போட்டு முடிந்து நீண்டநேரம் கழித்து தாராபாய் தூங்க போய்விட்டார். ஆனால் துக்காராமுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. அதனால் நேராக கிச்சனுக்குபோய் அம்மிக்கல்லை எடுத்து வந்து தூங்கி கொண்டிருந்த தாராபாய் தலையில் தூக்கி போட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தாராபாய் துடிதுடித்து இறந்தார். தன் கண்முன்னாலேயே மனைவி இறப்பதை பார்த்ததும், துக்காராம் நடுங்கி போன துக்கராம் அங்கேயே தூக்கு போட்டு தற்கொலையும் செய்துகொண்டார்.
இன்று காலை 3 பிள்ளைகளும் எழுந்து பார்த்தபோதுதான், தாயும், தந்தையும் பிணமாக கிடப்பதை கண்டு அலறி கதறி அழுதார்கள். தகவலறிந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் அளித்ததின்பேரில் உடல்கள் கைப்பற்றப்பட்டு, இந்த கொலை, தற்கொலை சம்பந்தமான விசாரணையில் இறங்கி உள்ளனர்.