ஒருவர் பெயரில் பல மின் இணைப்புகள் இருந்தால் இலவச மின்சாரம் கிடைக்குமா? செந்தில் பாலாஜி விளக்கம்
சென்னை: திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் இணைப்பு ஆதார் இணைப்பது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
கடந்த நவ. 27ஆம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டசபை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுக்க அவரது பிறந்த நாளை திமுகவினர் கோலாகலமாகக் கொண்டாடினர்
உதயநிதி ரசிகர் மன்றம் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றது. இப்போது வரையிலும் கூட பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது.
செந்தில் பாலாஜி பற்றி பேசிய வானதி.. காயத்ரியை நினைவூட்டிய செய்தியாளர்! என்ன சொன்னார் தெரியுமா?
உதயநிதி பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
உதயநிதி ரசிகர் மன்றம் சார்பில் ஒரு பக்கம் நிகழ்ச்சிகள் என்றால் திமுகவினர் சார்பிலும் கூட தொடர்ச்சியாகப் பல நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே சென்னை புதுப்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை சேப்பாக்கம் பகுதி 38ஆவது வட்ட திமுக சார்பில் நடந்த இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த நிகழ்ச்சியில் தையல் இயந்திரம், கிரைண்டர், மிக்ஸி, அடுப்பு, சில்வர் பாத்திரம் உள்ளிட்டவற்றை 500க்கும் அதிகமான ஏழை மக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "திமுக ஆட்சிக்கு வந்து 1.5 ஆண்டுகள் தான் ஆகிறது. அதற்குள் தேர்தல் சமயத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் 80% வாக்குறுதிகளை ஏற்கனவே நிறைவேற்றிவிட்டோம். கொரோனா சமயத்தில் ஒவ்வொரு ரேசன் அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதியாக தலா 4000 வழங்கப்பட்டது.
ஆதாரை இணைக்கும் பணிகள்
மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்கும் திட்டத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பெண்கள் மிகப் பெரியளவில் பயன் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இப்போது ஆதார் எண்ணையும் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் இப்போது 2.66 கோடி மின் இணைப்புகள் உள்ளன. தற்போது வரை சுமார் 60 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற மின் இமைப்புகளை ஆதாருடன் இணைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எத்தனை மின் இணைப்புகள்
வரும் டிச.31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மின் இணைப்புகளும் ஆதார் எண்களுடன் இணைக்கப்படும். மின்வாரியத்திடம் எந்தவொரு டேட்டாவும் இப்போது இல்லை. டேட்டா சேகரித்து மின்வாரியத்தை நவீனப்படுத்தும் திட்டம்தான் இது. அதேபோல இலவச மின்சாரம் குறித்தும் இங்குப் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஒருவர் எத்தனை மின் இணைப்புகளை வைத்திருந்தாலும், அத்தனை மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். இது தொடர்பாகப் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.
சிறப்பு முகாம்
தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மின்வாரிய இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மின்வாரிய இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கக் கட்டாயம் எதுவும் இல்லை. இருப்பினும், மானிய மின்சாரம் பெற ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்காக மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நவ. 28 தொடங்கிய இந்த சிறப்பு முகாம் டிச. 31 வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பண்டிகை நாட்கள் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 05.15 வரை இந்த சிறப்பு முகாம்கள் செயல்படுகிறது.
எப்படி இணைக்க வேண்டும்
பில் செலுத்தும் கவுன்டர்களிலேயே ஒருவரால் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க முடியும். ஆதார் அட்டை அல்லது ஆதார் எண்ணைச் சொன்னாலே இணைக்கப்படும். இதற்காக எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. வரும் டிச.31 வரை பொதுமக்கள் தங்கள் மின் கட்டணத்தை எவ்வித சிரமமும் இல்லாமல் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி செலுத்தலாம். அதேநேரம் இணையதளம் வாயிலாக மின்சார பில்லை செலுத்த ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்.