மத்திய அமைச்சர் பதவி.. இப்போதே 3 வாரிசுகள் கனவில் மிதக்க ஆரம்பிச்சுட்டாங்களாமே!
சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக சீனியர்களின் வாரிசுகள் மூன்று பேர் இப்போதே அமைச்சர் கனவில் மிதந்து வருகிறார்களாம். அதோடு அவர்கள் என்ன துறைக்கு அமைச்சர் ஆவார்கள் என இப்போதே அண்ணன்களின் விழுதுகள் கூறிக் கொண்டு திரிகின்றனர்.
ரவீந்திரநாத், ஜெயவர்த்தன் மற்றும் ராஜ் சத்யன் ஆகியோர் அடுத்து மோடி மீண்டும் வென்றால் நிச்சயம் அமைச்சர் ஆவார்கள் என்று இப்போதே அவர்களது ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்துள்ளனராம்.
தேனியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டுள்ளார். மதுரையில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் களம் கண்டார். அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் தென் சென்னையில் மீண்டும் போட்டியிட்டார்.
அடுத்து ஆட்சியமைக்கப் போவது பாஜகதான் என்று பாஜகவினரும் அதிமுகவினரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு சில கருத்துக் கணிப்புகளும் இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக என இருகட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றாலும் பாஜக அதிக இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறிவருகிறது. இதனால் உற்சாகம் அடைந்துள்ள பாஜக எந்த எல்லைக்கும் சென்று ஆட்சியமைக்க முயற்சிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அப்படி பாஜக ஆட்சியமைத்தால் அதிமுகவும் ஆட்சியில் பங்கேற்பது என்ற முடிவில் உள்ளது. கடந்த முறை பாஜக வென்று மோடி ஆட்சி அமைத்தபோதே பாஜக அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் தர முன்வந்தது. ஆனால் ஜெயலலிதா அதை மறுத்துவிட்டார். இது தம்பி துரை போன்றோருக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்தது. தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்தவர் அவர். பின்னர் முதலமைச்சர் வாய்ப்பு தனக்கு கிடைக்க பெரிதும் ஆசைப்பட்டார். அதுவும் கிடைக்காமல் போகவே தன்னால் முடிந்தவரை பாஜகவை விமர்சித்தார். அதன் பின்னர் அப்படியே அந்தர் பல்டி அடித்து மோடிதான் சிறந்த பிரதமர் என்ற அளவுக்கு வந்துவிட்டார்.
அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்.. 'எஸ்'சாக வாய்ப்பு.. இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு அக்னி பரிட்சை
இந்த நிலையில் ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமானால் அதில் அதிமுகவும் பங்கேற்கும் என்றே அதிமுக தலைமைக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறி வருகின்றன. அப்படி அதிமுகவும் அமைச்சரவையில் பங்கேற்றால், அதில் அதிமுக சீனியர்களின் வாரிசுகளாக போட்டியிட்ட வாரிசுகள் மூன்று பேரும் அமைச்சர்கள் தான் என்று அதிமுகவினர் கூறி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக துறைகளையும் குறிப்பிட்டே ரத்தத்தின் ரத்தங்கள் கூறி வருகிறார்கள்.
அதாவது மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையும், சுகாதாரத் துறை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தனுக்கும், நெடுஞ்சாலைத் துறை ஓபிஎஸ் –சின் மகன் ரவீந்திர நாத்துக்கும் கிடைக்கும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் பேசி வருகிறார்கள். எல்லாம் சரி ஜெயவர்தனுக்கு சுகாதாரத்துறையை கொடுத்தால், மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியதற்கு முன்பே அடிக்கல் நாட்டிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோச்சுக்குவாரே.