"ம்ஹூம்.. எங்களால முடியாது".. மேலிடம் எடுத்த முக்கிய முடிவு?.. அப்செட்டில் அதிமுக நிர்வாகிகள்
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: ஒரு முக்கியமான விஷயம் அதிமுக தரப்பு குறித்து கசிந்து வருகிறது.. இதை கேட்டு அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கடுமையான அப்செட்டில் உள்ளார்களாம்..!
வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு வந்துள்ளது.
இதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையமும் மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது.
"அவருக்கு" குறி வைத்த பாஜக.. டெல்லிக்கும் வர சொல்ல போகுதாமே.. ஒரே பிளானில் 3 மாங்காய்கள்.. நடக்குமா?
பாமக
இந்த தேர்தலை எதிர்கொள்ள இப்போதைக்கு திமுக தான் முதல் நபராக தயாராக உள்ளது.. அடுத்து பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.. ஆனால், அதிமுக சத்தமே இல்லாமல் உள்ளது.. ஆனால், கடந்த ஒரு மாதமாகவே, மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி போனை போட்டு தெம்பூட்டி வருவதாகவும், சட்டமன்ற தேர்தலில் விட்டதை இதில் மொத்தமாக பிடித்துவிடலாம் என்று நம்பிக்கை தந்து வருவதாகவும் செய்திகள் பரபரத்தன.
உட்கட்சி பூசல்
ஆனால், இன்றைய சூழலில் அதிமுகவுக்குள் இப்போதைக்கு இணக்கமான சூழல் காணப்படவில்லை.. உட்கட்சி பூசலில் சிக்கி தவித்து வருகிறது.. இதனால் வீறு கொண்டு வரும் திமுகவுக்கு இணையாக எந்த காரியத்தையும், அக்கட்சியால் செய்யமுடியாத சூழல் உள்ளது.. குறைந்தபட்சம் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட முடியாத அளவுக்கு இக்கட்டான நிலைமையில் அக்கட்சி திண்டாடி வருகிறது.
அறிவுறுத்தல்
2 வாரத்துக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் போட்டு, நிர்வாகிகளை உள்ளாட்சி தேர்தலுக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தியிருந்தது அதிமுக... ஆனாலும், தற்சமயம், உள்ளாசி தேர்தல் குறித்து அக்கட்சி எந்த முடிவில் உள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் ஒரு முக்கியமான தகவல் அதிமுக பற்றி கசிந்து வருகிறது.
பணம்
நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலுக்கு தலைமையிலிருந்து பணம் எதுவும் செலவுக்கு கொடுக்கப்பட வாய்ப்பில்லையாம்.. அதாவது, அந்தந்த மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏக்களும், முன்னாள் அமைச்சர்களும்தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லிவிட்டார்களாம். இதனால், நிர்வாகிகள் கடுமையான அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது..
அப்செட்
கடந்த முறையே, பட்டுவாடாக்களில், சிலர் கையாடல் செய்துவிட்டதாகவும், போய் சேர வேண்டிய இடத்திற்கு பரவலாக போய் சேரவில்லை, அதனால்தான் அதிமுக கோட்டையான சில இடங்களைகூட திமுகவால் வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுவிட்டது என்ற கோபமும் ஏற்கனவே அதிமுக தலைமைக்கு உள்ளது.. அதற்கே இன்னும் விடை கிடைக்காத நிலையில், நடக்க போகும் தேர்தலுக்கு பணம் தர வாய்ப்பில்லை என்று தகவல்கள் வருகின்றன..
அதிமுக
ஒருவேளை அதுதான் காரணமா, அல்லது உட்கட்சி பூசலுடன் தேர்தலை சந்தித்தால், அது எதிர்மறையான ரிசல்ட்களை பெற்று தந்துவிடும் என்பதுதான் காரணமா அல்லது உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்கள் என்றாலே ஆளும் தரப்புதான் வழக்கமாக வெற்றி பெறுவது வழக்கம் என்பதால், இந்த தேர்தலை அதிமுக அசால்ட்டாக எடுத்து கொண்டு விட்டதோ என்றெல்லாம் தெரியவில்லை.. ஆனால், வைட்டமின்களை தொகுதிகளில் இறக்கினால்தான் வேலை செய்ய முடியும் என்ற மனோபாவம், அதிமுக நிர்வாகிகளிடம் தென்பட்டு வருகிறதாம்..!