தமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா?.. பரபரக்கும் அரசியல் களம்
சென்னை: ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் இருப்பது போல தமிழகத்திலும் ஏராளமான துணை முதல்வர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளை காட்டிலும் அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பிரச்சனை தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சையும் மிகுந்த கவலை கொள்ள செய்திருக்கிறது.
நாளுக்குநாள் கோஷ்டிப்பூசல் அதிகரிப்பதால் எடப்பாடி பழனிசாமி விழிபிதுங்கி நிற்கிறாராம். ஓ.பி.எஸ்.சுடன் இணைப்பு என்ற தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என சில நேரங்களில் அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு
ஓ.பி.எஸ். தனது மகனை அடுத்த அதிகார மையமாக கொண்டு வருவதை அவரின் ஆதரவாளர்களை தவிர மற்ற எந்த நிர்வாகிகளுக்கும் பிடிக்கவில்லையாம். இது தொடர்பாக எடப்பாடியை சந்தித்த சீனியர் நிர்வாகிகள் சிலர், ஆந்திராவை போல் துணை முதல்வர் பதவியை மேலும் 2 பேருக்கு வழங்கலாம் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இப்படி செய்வதன் மூலம் ஓ.பி.எஸ்.க்கு இருக்கும் துணை முதல்வர் என்ற தனி அதிகாரம் பரவலாக்கப்படும் என யோசனை அளித்தார்களாம். இதற்கு கிட்டத்தட்ட ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பதவி எனக்கு தரவில்லை, உனக்கு தரவில்லை என எம்.எல்.ஏ.க்களை ஏதாவது கிளப்பிவிட்டு அதனால் ஆட்சிக்கு சிக்கல் வரக்கூடாது என நினைக்கிறாராம்.
எப்படிப்பார்த்தாலும் வடதமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு மட்டும் துணை முதல்வர் ஆகும் வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர் அதிமுக வட்டாரத்தினர்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஜாதிக்கு ஒன்று என 5 துணை முதல்வர்களை நியமித்துள்ளார். அதே பாணியில் பிராந்தியம் அல்லது ஜாதி அடிப்படையில் தமிழகத்திலும் துணை முதல்வர்கள் நியமனம் வருமா என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது.