கவலையில் நிர்வாகிகள்.. நம்பிக்கை தரும் அதிமுக தலைமை.. பாஜகவை கழட்டிவிடுமா?
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலும், நகராட்சி தேர்தலும் நடைபெற போகிறது. இதில் அதிமுக தனித்து போட்டியிட வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள். பாஜக உடன் இனியும் கூட்டணி வேண்டாம் என்றும் நிர்வாகிகள் குமுறுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற போகிறது. செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.
ஹோட்டல்களில் 50% பேருக்கு மேல்.. அனுமதித்தால் தொழில் உரிமம் ரத்து..சென்னை மாநகராட்சி அதிரடி
இந்த தேர்தல் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளதால், இதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
9 மாவட்டங்கள்
9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்துவதற்கான, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை விரைவில் நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.
வார்டு வரையறை
வார்டு வரையறை செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.
கட்சிகள் முடிவு
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதிமய்யம் உள்பட பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகின்றன. சட்டசபை தேர்தலில் தோற்றுபோன. அதிமுக , உள்ளாட்சி தேர்தல் வெல்வதற்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது.
3 சதவீத வாக்குகள்
வெறும் 3 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் அதிமுகவைவிட திமுக அதிக வாக்குகள் வாங்கியிருப்பதால் எப்படியாவது தீவிராக வேலை செய்தால் வெற்றி நிச்சயம் என்று மூத்த தலைவர்கள் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். ஆனால் நிர்வாகிகளோ பாஜகவை உள்ளாட்சி தேர்தலில் கழட்டிவிட வேண்டும் என்று கோருகிறார்கள்.
குமுறும் நிர்வாகிகள்
பாஜக உடன் கூட்டணி வைத்ததால் தான் சட்டசபை தேர்தலில் தோற்றுப்போனோம்.எனவே உள்ளாட்சி தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் என்று நிர்வாகிள் குமுறுவதாக கூறப்படுகிறது. அண்மையில் விழுப்புரம் மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் நிர்வாகிகள், வருகிற உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரடியாக கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
வெளிப்படை
ஏற்கனவே, சி.வி.சண்முகம், கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தோம். அதனால், பாஜவுடன் இனி தேர்தல் கூட்டணி கிடையாது என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார். இதே கருத்தைத்தான் பல அதிமுக நிர்வாகிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
கட்சி தலைமை நெருக்கம்
மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் சிறுபான்மை மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள். ஆனால், தற்போது பாஜக தலைமை கொடுக்கும் நெருக்கடி காரணமாக கூட்டணி வைக்க வேண்டிய நிலைமை கட்சி தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை உடைத்து வெளியே வர வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாக தலைமைக்கு கோரிக்கை வைக்க தொடங்கி இருக்கிறார்கள்.
முடிவெடுக்க முடியவில்லை
முன்னாள் அமைச்சர் சண்முகம்போல மேலும் பல மாவட்டங்களிலும் இதே கோரிக்கையை நிர்வாகிகள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். பாஜகவை சேர்ப்பதால் உள்ளாட்சிகளில் நாம் படுதோல்வியை சந்திக்க வேண்டியது வரும் என்று தலைமையை எச்சரிக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் கட்சி முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தாலும், அதிமுகவின் முன்னணி தலைவர்கள் அதிரடியாக பாஜவை கூட்டணியில் கழட்டிவிட முடியாமல் தவித்து வருகிறார்களாம் .