தமிழகத்தில் அமித்ஷாவின் வியூகம் கைகொடுக்குமா... தாமரையை மலரச் செய்வாரா இந்த ராஜதந்திரி!
சென்னை: கால்பாதிக்கும் இடங்களில் எல்லாம் பாஜகவை காலூன்ற செய்யும் அமித்ஷாவுக்கு மிகவும் டப் கொடுப்பது தமிழகமும் கேரளாவும்தான்.
ரஜினிகாந்தை கையில் வைத்துக் கொண்டு தமிழகத்தில் தடம் பதிக்கலாம் என்ற அமித்ஷாவின் முதல் வியூகம் தவிடுபொடியானது. கழுவுற மீனில் நழுவுற மீனைப்போல் நழுவிச் சென்றார் ரஜினி.
பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழை புகழ்ந்து தள்ளியது அமித்ஷாவின் வியூகங்களில் ஒன்றுதான் என கூறப்படுகிறது.
தேர்தல் திருவிழா
தமிழகத்தில் தேர்தல் திருவிழா, தேர்தல் தேதி அறிவிப்பு என்னும் கொடியேற்றத்துடன் தொடங்கி விட்டது. இனிமேல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 6-ம் தேதி வரை திருவிழா கொண்டாட்டம் களைகட்டும். ''இவரா இந்த கூட்டணிக்கு போய்ட்டாரு; என்ன இவ்வளவு பெரிய கட்சிக்கு இத்தனை தொகுதி தானா; ஒண்ணுமில்லாத இந்த கட்சிக்கா இத்தனை தொகுதிகள்" என்று இதுபோல் மக்கள் பரபரப்பாக பேசும் சம்பவங்கள் இனிமேல் அரங்கேறும்.
வித்தியாசமான தேர்தல்
தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலின்போதும் மாறி, மாறி உதயசூரியன்(திமுக) உதிப்பதையும், இரட்டை இலை(அதிமுக) மலர்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளன. ஆனால் ஆச்சரிய நிகழ்வாக அதிமுக 2011 முதல் தொடர்ந்து 2 முறை ஆட்சியை பிடித்து அனைவரையும் அதிசயத்தில் ஆத்தியது. ஆனால் இந்த தேர்தல் மிகவும் வித்தியாசமானது.
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி
ஏனெனில் திமுக, கருணாநிதி என்னும் அரசியல் சாணக்கியன் இல்லாமலும், அதிமுக, தலைமைக்கு தனித்துவமான ஜெயலலிதா இல்லாமலும் களம் காண்கின்றன. கருணாநிதி இல்லாமல் சாதித்து காட்ட வேண்டிய நெருக்கடியில் ஸ்டாலின் உள்ளார். இவர் எப்படி முதல்வரானார்? என எல்லாருக்கும் தெரியும் என்ற பேச்சுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
பாஜகவின் எந்திரம்
இதுபோக தமிழகத்தில் இந்த முறை வலுவாக காலூன்ற வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் ஒரு கட்சி உள்ளது. அதுதான் பாஜக. நாட்டையே ஆண்டு கொண்டிருக்கும் பாஜகவுக்கு, தமிழகததில் கால் பதிக்க வேண்டும் என்ற பெருங்கனவு எப்போதும் உண்டு. அந்த பெருங்கனவை நனவாக்க பாஜக கையில் வைத்திருக்கும் எந்திரம்தான் அமித்ஷா. பாஜக நுழைய முடியாத பல மாநிலங்களில் பாஜகவை உச்சி முனைக்கு கொண்டு வைத்தவர்தான் இந்த அமித்ஷா.
மாநிலங்களில் காலூன்ற வைத்தவர்
ஒவ்வொரு மாநில தேர்தகளின்போதும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி இறுதி வரை களத்தில் நின்று பாஜகவுக்கு வெற்றியை கொடுத்து விட்டு செல்வார் அமித்ஷா. தமிழத்தில் திமுக, அதிமுக போல் பீகாரில் ராஷ்ட்டிரிய ஜனதா தளம். ஐக்கிய ஜனதா தளம் அவ்வளவு வலிமை. அங்கு காங்கிரசும் சாதாராண கட்சியாக இல்லை. ஆனால் இந்த கூட்டணியை உடைத்தெரிந்து, வியூகம் வகுத்து 2015-ல் காலுன்றியது பாஜக. கடந்த சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமாருடன் கைகோர்த்து ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக இடங்களை பெற்று சாதித்து காட்டியது பாஜக. இதற்கு காரணம் அமித்ஷாதான்.
மேற்கு வங்கத்தில் உறுதி
இதேபோல் பாஜக நினைத்து பார்க்க முடியாத அருணாச்சல பிரதேசம், கம்யூனிஸ்ட்டுகள் கோட்டையான திரிபுரா, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திய உத்தப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜகவை நிலைநிறுத்தியவர் அமித்ஷா. கம்யூனிஸ்ட்டுகள் கோட்டையாக இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கோட்டையாக மாறிய மேற்கு வங்கத்தில் கூட வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்க வலுவாக காய் நகர்த்தி வருகிறார் அமித் ஷா. மம்தாவின் மூளையாக செயல்பட்டவர்களை எல்லாம் தன் பக்கம் இழுத்து மேற்கு வங்கத்தில் வெற்றியை உறுதி செய்து வருகிறார்.
டப் கொடுக்கும் தமிழகம்
இவ்வாறு வியூகம் வகுத்து கால்பாதிக்கும் இடங்களில் எல்லாம் பாஜகவை காலூன்ற செய்யும் அமித்ஷாவுக்கு மிகவும் டப் கொடுப்பது தமிழகமும் கேரளாவும்தான். சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு மறக்க முடியாத அடி கொடுத்து நாங்கள் எப்பவும் காம்ரேடுகள் பக்கம்தான் என்று நிரூபித்தனர் சேட்டன்கள். ஒன்று இரண்டு இடங்களையாவது பிடிக்கும் பாஜக, தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பலத்த அடி வாங்கியது அமித்ஷாவின் வியூகம் தமிழகத்தில் எடுபடாமல் போனதை எடுத்துக்காட்டியது. டுவிட்டரில் பாஜகவுக்கு எதிராக தமிழகத்தில் பலர் திரண்டு நின்றதும் அமித்ஷா வியூகத்திற்கான தோல்விதான்.
ரஜினியை நம்பி ஏமாந்தார்
ரஜினிகாந்தை கையில் வைத்துக் கொண்டு தமிழகத்தில் தடம் பதிக்கலாம் என்ற அமித்ஷாவின் முதல் வியூகம் தவிடுபொடியானது. கழுவுற மீனில் நழுவுற மீனைப்போல் நழுவிச் சென்றார் ரஜினி. தமிழர்களுக்கு மிகவும் உயிரான தமிழ் மொழியை வைத்தே அமித்ஷா புது வியூகம் வகுக்கிறார் என்று சொல்லப்படுகிறது. பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தமிழை புகழ்ந்து தள்ளியது அமித்ஷாவின் வியூகங்களில் ஒன்றுதான் என கூறப்படுகிறது. தமிழர்களின் கடவுளான முருகன் வேல் பாஜக கையில் எடுத்ததும் அமித்ஷாவின் வியூகம்தான் என்றும் கருதப்படுகிறது.
மக்களுக்கு உணர்த்த வேண்டும்
கடந்த முறை தமிழகம் வந்த அமித்ஷா ''அரசியலில் தான் இல்லை'' என்ற ரஜினியின் முடிவால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். பல்வேறு வியூகங்கள் வகுத்தாலும் இவை எல்லாம் தமிழகத்தில் எடுபடுமா என்பதே பல மில்லியன் டாலர் கேள்வி. திராவிட காட்சிகள் பக்கமே சாய்ந்து நிற்கும் தமிழக மக்களை ஈர்ப்பது அவ்வளவு சாதாரண விஷயமல்ல. பாஜக மற்ற மதங்களுக்கு எத்திரான கட்சி என்ற பிம்பத்தை தமிழகத்தில் அமித்ஷா உடைத்தாக வேண்டும். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களில் பாஜக மக்களுக்கு எதிராக இல்லை என்பதை உணர்த்தியாக வேண்டும்.
தாமரை மலருமா?
தற்போது பாஜக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் இன்று தமிழகம் வரவுள்ளார் அமித்ஷா. இதனால் பல்வேறு எதிர்பார்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. தமிழகத்தில் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. தமிழகத்தில் கால் பதிக்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட தன்மானத்துக்கு விடுக்கப்பட்ட சவால் என்பதை அமித்ஷா உணர்ந்து கொண்டுள்ளார். தமிழகத்தில் அமித்ஷாவின் வியூகம் பலிக்குமா? தாமரை மலருமா? என்பதை அறிய மே 2-ம் தேதி வரை காத்திருங்கள்.