அமெரிக்க அதிபரே வியந்தாரே.. அர்ஜுனும் கேட்கிறார்.. எஸ்பிபிக்கு பாரத ரத்னா.. வலுக்கும் கோரிக்கை
சென்னை: டெல்லிக்கு, அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 2000மாவது ஆண்டில் வருகை தந்தார். அப்போது குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியில் எஸ்பி பாலசுப்ரமணியமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அமெரிக்க அதிபரிடம் இவர் எங்கள் ஊர் பாடகர். 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார் என்று கூறி அறிமுகம் செய்து வைத்தாராம் குடியரசுத் தலைவர் நாராயணன்.
சற்று நேரம் கழித்து யோசித்தபடியே, பில் கிளிண்டன், எஸ் பி பாலசுப்பிரமணியமிடம் வந்து உண்மையிலேயே நீங்கள் 30 ஆயிரம் பாடல்கள் பாடி விட்டீர்களா என்று கையை பிடித்தபடியே, கேட்டுள்ளார். அதற்கு 35,000 என்று கூலாக பதில் சொல்லியுள்ளார் எஸ்பிபி.
இந்தியா, இலங்கை உறவு... ஆயிரம் ஆண்டுகள் பழமையானது... ராஜபக்சவிடம் மோடி புகழாரம்!!
அமெரிக்க அதிபரே வியந்தார்
வியந்துபோன அதிபர் கிளிண்டன், நான் கேள்விப்பட்ட வரை ஆயிரம் பாடல்களை ஒருவர் பாடுவதே அதிசயம். உங்களால் எப்படி இவ்வளவு பாடல்கள் பாட முடிந்தது என்று வியந்து சொன்னாராம். ஆனால் இப்போது மறைவதற்கு முன்பாக எஸ் பி பாலசுப்பிரமணியம் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி சாதித்துள்ளார். அமெரிக்க அதிபரே வியந்த எஸ்பிபிக்கு பாரத ரத்னா கொடுப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும் என்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.
அர்ஜுன் பேட்டி
பாலசுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றிருந்த நடிகர் அர்ஜுன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, எஸ்பி பாலசுப்பிரமணியமுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதுதான் அவருக்கு உரிய கௌரவமாக இருக்க முடியும் என்று தெரிவித்தார். இதே கருத்து திரை உலகில் உள்ள மேலும் பலருக்கும் இருக்கிறது.
சமூக வலைத்தளங்கள்
திரையுலகம் தாண்டி ரசிகர்கள் வட்டாரத்திலும் எஸ்பி பாலசுப்பிரமணியமுக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கிறது. சமூக வலைத்தளங்களில் அவர்கள் இந்த கோரிக்கையை முன் வைப்பதை பார்க்க முடிகிறது. பாரத ரத்னா என்று டுவிட்டரில் தேடினாலே ஏகப்பட்ட ரசிகர்களின் வேண்டுதல்களை நீங்கள் பார்க்க முடியும்.
காலத்திற்கான குரல்
தமிழ் ரசிகர்கள் மட்டும் கிடையாது. தெலுங்கு, கன்னடம் என மொழி பேதம் எதுவும் இல்லாமல் அனைத்து இந்தியர்களின் ஒருமித்த கோரிக்கையாக இது மாறியுள்ளது. எல்லா காலத்திற்குமான குரல் .. 16 மொழிகளில் 40,000 பாடல்கள் .. உண்மையில் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர்! என்கிறார் இந்த நெட்டிசன்.
பிரதமருக்கு கோரிக்கை
பிரதமருக்கு ஒரு பணிவான கோரிக்கை. எஸ்.பி.பி.க்கு இந்த ஆண்டு பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். தயவு செய்து ஆவண செய்யுங்கள் என்கிறார் இவர்.