"170" கன்பர்ட்.. மிச்சம் மீதிதான் அவங்களுக்கு.. அதிமுக செம ஸ்டிராங்க்.. கூட்டணியில் நிலவும் கசமுசா!
சென்னை: 170 தொகுதிகளில் போட்டியிடுவது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது.. இதுதான் சிக்கலே.. கூட்டணியில் தொடர் இழுபறியில் நடந்து வருவதற்கும், கட்சிகள் தங்கள் முடிவை அறிவிக்க முடியாமல் திறி வருவதற்கும் இதுதான் பிரச்சனையாக இருந்து வருகிறது..!
வழக்கமாக ஜெயலலிதா இருந்தவரையில், அனைத்து கட்சிகளையும்விட முந்திக் கொண்டு வந்து கூட்டணியை அறிவிப்பார்.
சீட்டுகளை ஒதுக்கிவிட்டு, உடனடியாக முதல் ஆளாக பிரச்சாரத்துக்கும் கிளம்பி விடுவார். ஆனால், இப்போது அப்படி ஒரு துணிச்சலில் அதிமுக இறங்க தயாராக இல்லை.. தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கவும் தயாரில்லை.
யோசனை
கூட்டணி கட்சிகளே வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவில் பல நாட்கள் யோசித்து வந்திருக்கிறது.. அதிலும் பாமகவை கழட்டி விட சொல்லி எத்தனையோ மூத்த தலைவர்கள் அதிமுக தலைமையிடம் வலியுறுத்தியவாறே வந்துள்ளனர்.. எனினும் வன்னியர்களின் வாக்குகளை இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறது தலைமை.
நன்மை
இதுவரை நாம் வன்னியர்களுக்கு செய்த நன்மைகளை சொல்லி ஓட்டு கேட்போம், கண்டிப்பாக அவர்கள் நமக்கு வாக்களிப்பார்கள் என்றும் கட்சியின் சீனியர்கள் எடுத்து சொல்லினர்.. இதையும் அமைதியாக கேட்டுக் கொண்ட எடப்பாடியார் தரப்பு, பாமக விஷயத்தில் அவசரம் காட்டாமல் பொறுமையாக அணுகி வருகிறது..
பேச்சுவார்த்தை
இந்த சமயத்தில் 2 முறை கூட்டணியை உறுதி செய்ய பேச்சுவார்த்தைகள் அந்த கட்சியுடன் நடந்து வருகிறது.. ஆனால் அவர்கள் 40 சீட் வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்களாம்.. அதிமுகவுக்கோ 170 இடங்களில் போட்டியிட்டால், இறுதியில் 130 இடங்களையாவது வென்று மெஜாரிட்டியை கையில் வைத்திருக்க வேண்டும் என்பது அதன் கணக்காக உள்ளது..
பாஜக
பாமகவுக்கே 40 சீட் என்றால்,பாஜக கேட்கும் சீட்டை ஒதுக்குவதில் சாத்தியமே கிடையாது.. மத்தியில் தங்களுக்கு தயவு வேண்டும் என்று எடப்பாடியார் தரப்பு நினைக்கிறது.. அதனால் பாஜகவும் வேண்டும், பாமகவும் வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.. இதில் யார் யாருக்கு எவ்வளவு சீட் என்பதில்தான் இழுபறி நீடித்து வருகிறது.
40 சீட்டுக்கள்
170 தொகுதிகளில் அதிமுக போட்டி என்றே வைத்து கொண்டாலும், மீதம் இருக்கும் 64 இடங்களைதான் பிரித்து தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.. 40 சீட்டுக்களையும் தாண்டி, இடஒதுக்கீடு விஷயத்தில் பாமக பிடிவாதம் காட்டுவதும் அதிமுகவுக்கு தர்மசங்கடத்தை தந்துள்ளது.. ஒரு சமுதாயத்தினரின் திருப்திக்காக மற்ற சமுதாயத்தினரின் அதிருப்தியை சம்பாதிக்க அதிமுக தயாராக இல்லை. குறிப்பாக பட்டியல் இன மக்களின் வாக்குகளை இழக்க அதிமுக விரும்பவே இல்லை.. அதனால்தான் இன்னும் கூட்டணி முடிவு எட்டப்படாமலேயே இருக்கிறதாம்!
இழுபறி
கடந்த 2019 எம்பி தேர்தலை பொறுத்தவரை அதிமுக - பாஜக கூட்டணி 30 சதவீத வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது. இப்போது கூட்டணியில் 40 அல்லது 45 தொகுதிகளில் போட்டியிட்டாலும்கூட, அதிகபட்சம் 5 சதவீதத்தைதான் அந்த கட்சியால் பெற முடியும் என்று யூகிக்கப்படுகிறது.. ஒருவேளை ரஜினி பாஜகவுக்கு ஆதரவாகவே வாய்ஸ் தந்தாலும்கூட, அல்லது அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி, இந்த தேர்தலை தனித்து சந்தித்தாலும்கூட, 10 சதவீதத்தை அக்கட்சி தாண்டாது என்பதே தற்போதைய கணிப்பு.