எடப்பாடியாரை தூக்கி பிடித்த ஓபிஎஸ்.. ஆனால் முருகன் சொல்வதை பாருங்க.. இதெல்லாம் செட்டாகுமா!
தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று எல்.முருகன் கூறியுள்ளார்
சென்னை: அதிமுகவில் புயல் ஓய்ந்த நிலைலயில், அடுத்து ஆட்சியமைக்கப்போவது அதிமுக-பாஜக கூட்டணிதான் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து, 60 சீட்டை பெறுவதற்கான முயற்சியை பாஜக மறுபடியும் எடுத்துள்ளதாக தெரிகிறது.
2 மாதத்துக்கு முன்பேயே தமிழக பாஜக தேர்தலை சந்திக்கும் என்றும், நாங்க சும்மா நின்றாலே 60 சீட் ஜெயிப்போம் என்றும் மாநில தலைவர் எல்.முருகன் சொல்லி இருந்தார்.
ஒருவேளை அதிமுகவுடன் சீட் பேரத்துக்கான அடிகோலாக இது பார்க்கப்பட்டது.. 60 சீட் பற்றி அதிமுக வாயே திறக்கவில்லை.. இதற்கு பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவி கொடி பறக்கும் என்று எல்.முருகன் சொன்னார்.
பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்ப்போம்... அதிமுக ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்துவோம் -மு.க.ஸ்டாலின்
பாஜக
இதை பற்றி கருத்து சொன்ன அதிமுக தரப்பு, "கோட்டையில் என்னைக்குமே தேசியகொடிதான் பறக்கும்" என்றனர்.. இதுபோன்ற சூழலில்தான் ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில் முருகனிடம் 2 கேள்விகள் எழுப்பப்பட்டது. அதில், "அதிமுக அரசின் கொள்கை என்பது இருமொழிக்கொள்கை என சொல்கிறார்களே" என்ற கேள்விக்கு, எங்களுக்கு ஒரு கொள்கை உள்ளது போல, அவர்களுக்கும் ஒரு கொள்கை உண்டு. எங்கள் நிலைப்பாடு மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் என்று பதிலளித்தார்.
60 சீட்டுகள்
"60 சீட்டில் ஜெயிப்போம் என்று சொல்லி இருக்கிறீர்களே" என்று கேட்டதற்கு, 2016ஆம் ஆண்டில் 75 இடங்களில் வெற்றி, தோல்வியை நிர்ணயத்தது பாஜகதான்.. அதன் அடைப்படையில்தான் இப்பவும் 60 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன் என்றார். இந்த விளக்கம் தந்த பிறகும் அதிமுக, 60 சீட் பற்றி எந்த கருத்தும் கூறவில்லை.
முருகன்
அதற்குள் முதல்வர் வேட்பாளர் விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.. 2 நாளைக்கு முன்பும், இந்த விவகாரம் குறித்து சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் மட்டும் இல்லை, வேற யார் கருத்து சொன்னாலும் அது நாகரீகமாக இருக்காது என்றார். இன்றும் ஒரு பேட்டியை முருகன் தந்துள்ளார்.
வாய் திறக்குமா?
அப்போது, தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப்போவது அதிமுக-பாஜக கூட்டணிதான் என்றும், 2016ம் ஆண்டு தனித்து போட்டியிட்ட பாஜக 90 தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயித்தது போலவே இந்த முறையும் பெருவாரியான வெற்றியை நிர்ணயிக்கும் என்றார். அதிமுகவுக்குள் இன்று சுமூக முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில், முருகன் மறுபடியும் கூட்டணி குறித்து பேசியுள்ளது கவனிக்கத்தக்கதாக உள்ளது. இவ்வளவு நாள் கூட்டணி பற்றி அமைதி காத்த அதிமுகவின் இன்றைய "இரட்டை தலைமை" எந்த மாதிரியாக இதை அணுக போகிறது, இனியாவது 60 சீட் பற்றி வாய் திறக்குமா என்பது பெரும் எதிர்பார்ப்பாகி உள்ளது.