அடேங்கப்பா.. “ட்விஸ்ட்டு”.. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
பேனர் விவகாரம் கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்திய நிலையில், பல்டி அடித்துள்ளார் ஈபிஎஸ்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைத்த தேர்தல் பணிமனை பேனரில் கூட்டணியின் பெயர் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையிடம் பேசியுள்ளனர். பின்னர் மாலையில் தேசிய ஜனநாயக கூட்டணி என பேனரில் மாற்றப்பட்டது. இதன் மூலம், பாஜக, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு என்ற முடிவை எட்டவுள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்பு காட்டிவருகின்றன. இன்று வேட்பாளரை அறிவித்த கையோடு தேர்தல் பணிமனையில் பேனரையும் வைத்தது அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி.
அந்த பேனரில் இடம்பெற்றிருந்த விஷயங்கள் கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தி இருந்த நிலையில், பேனர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலையிடம் பேசியுள்ளனர்.
டெல்லி புறப்பட்ட அண்ணாமலை.. 6 மணி நேரத்தில் நடந்தது என்ன? “காலை வரை காத்திருங்கள்”.. சட்டுனு பதில்!
ஓபிஎஸ் - ஈபிஎஸ் வேட்பாளர்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ், அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் இறங்கிவிட்ட நிலையில், அதிமுக சார்பாக வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. பாஜக போட்டியிட்டால் விட்டுக் கொடுப்போம் இல்லையெனில் நாங்கள் போட்டியிடுவோம் என்று ஓபிஎஸ் தரப்பு கூறியிருந்த நிலையில், இன்று ஈபிஎஸ் வேட்பாளரை அறிவித்துவிட்டதால் ஓபிஎஸ் அணியும் வேட்பாளரை அறிவித்தது.
பாஜக தலைவர்கள் படம் இல்லை
எடப்பாடி பழனிசாமி தங்கள் அணி வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்னதாக, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தலைமை பணிமனையை திறந்து வைத்தார். அங்கு வைக்கப்பட்டுள்ள பேனரில் பாஜக தலைவர்களின் படங்கள் இடம்பெறவில்லை. அதேநேரம், அதிமுக கூட்டணியில் இருக்கும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே.வாசன், புரட்சி பாரதம் கட்சியின் பூவை ஜெகன்மூர்த்தி, புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
கூட்டணி பெயரில் குழப்பம்
மேலும், தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி என இடம்பெற்றிருந்தது. பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி ஆகும். ஆனால், இடையே முற்போக்கு என்ற வார்த்தையை இணைத்திருந்தது ஈபிஎஸ் அணி. கூட்டணி பெயரும் மாற்றப்பட்டு, கூட்டணியில் பிரதான அங்கம் வகிக்கும் பாஜக தலைவர்களின் படமும் பேனரில் இல்லாமல் இருந்தது எடப்பாடி பழனிசாமி, பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டு விட்டார் என்ற பேச்சுகளைக் கிளப்பிவிட்டது. இந்த நிகழ்வு பாஜக - ஈபிஎஸ் அணி இடையே புகைச்சலை ஏற்படுத்தியது.
எடப்பாடி உத்தரவு - பரபரப்பு
இந்நிலையில், மாலையே, இந்த பேனரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, கூட்டணி பெயர் மாற்றப்பட்டுள்ளது. கூட்டணி பெயர் தவறாக இருந்த தகவல் எடப்பாடி பழனிசாமி காதுக்குச் சென்றதும், உடனடியாக அவர், கூட்டணி பெயரை மாற்றுமாறு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தப் பிரச்சனை தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடமும், எதிர்பாராமல் நிகழ்ந்த தவறு என்று சொல்லிவிடுமாறு சீனியர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
மேலும், புதிய பேனரை வைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் பிரதமர் மோடி, அண்ணாமலை படங்களைச் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உடனையாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயர் அந்த பேனரில் இடம்பெற்றுள்ளது. மேலும், பிரதமர் மோடி, அண்ணாமலை படங்களுடன், அதிமுக தலைமையிலான கூட்டணி எனக் குறிப்பிட்டு புதிய பேனர் நாளை வைக்கப்படும் என்றும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுடுகிறது.
அண்ணாமலையிடம் பேசிய அதிமுக சீனியர்கள்
இதற்கிடையே, அதிமுகவின் சீனியர் நிர்வாகிகள் அண்ணாமலையை தொடர்புகொண்டு, விஷயத்தை தெளிவுபடுத்தி, பேனரை மாற்றி விடுவதாகக் கூறியுள்ளனர். டெல்லி கிளம்புவதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, ஈரோட்டில் கூட்டணி பெயர் பேனரில் மாறியது எழுத்துப்பிழை என்று அதிமுக சீனியர் நிர்வாகிகள் கூறினர். ஆறு மணி நேரத்தில் பேனரை மாற்றியுள்ளனர். அதுபோல பிரதமர் மோடி படத்திற்கு நாளை காலை வரை காத்திருங்கள் எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பக்கம் சாய்கிறதா?
பேனரில் இடம்பெற்ற பிழை, அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அண்ணாமலையிடம் பேசியது, அதோடு பேனரில் கூட்டணி பெயர் மாற்றப்பட்டது இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாடு பாஜக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியை இந்த இடைத்தேர்தலில் ஆதரிக்கும் முடிவை எடுத்திருப்பது தெளிவாகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர், மீண்டும் 'தேசிய ஜனநாயக கூட்டணி' என பேனரில் மாற்றியிருப்பதன் மூலம், பாஜக தங்கள் பக்கம் தான் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.