மே 31ம் தேதிக்கு பிறகு பஸ் போக்குவரத்து தொடங்குமா? மருத்துவக்குழு அளித்த பரிந்துரை என்ன
சென்னை மே31ம் தேதி ஊரடங்கு முடிகிறது. அதன்பிறகு தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தை தொடங்கினால் ஆபத்து என்று மருத்துவக்குழு தமிழக அரசிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இந்த லாக்டவுன் நான்கு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் வரும் மே 31ம் தேதியுடன முடிகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் லாக்டவுனை மே 31ம் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்கள் (ஜூன் 14ம் தேதி) நீட்டிக்கலாமா அல்லது லாக்டவுனை படிப்படியாக விலக்கிக் கொள்ளலாமா? பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்கிழமை தலைமை செயலகத்தில் 19 பேர் அடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
உலகில் முதல் முறையாக புதிய உச்சம்.. கொரோனாவால் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் மரணம்
அமைச்சர் அதிகாரிகள் பங்கேற்பு
இந்த ஆலோசனை கூட்டம் காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சுமார் 1.30 மணி நேரம் நடந்தது. இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பீலா ராஜேஷ், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை தலைவர் பிரப்தீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இறப்பை தடுக்க சிகிச்சை
இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் நோஸை தமிழகத்தில் பரவுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய யுக்திகள், மருத்துவ பரிசோதனை செயல்திட்டங்கள், மருத்துவ சிகிச்சை முறைகள், இறப்பை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது எப்படி போன்ற நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சென்னைக்கு எப்படி
கூட்டத்தில் பேசிய மருத்துவர்கள் , தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பேருந்து போக்குவரத்தை தொடங்கினால் கொரோனா பரவல் வேகம் அதிகரிக்கும் என்று முதல்வரிடம் மருத்துவக்குழு கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. சென்னைக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்க கூடாது என்றும் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
எப்போது அறிவிக்கும்
இந்நிலையில் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்தாம் கட்ட ஊரடங்கை ஜூன் 1ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்னும் ஒரு சில நாளில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பேருந்துகளுக்கு அனுமதி?
இந்த ஆலோசனைக்கு பின்னர் கொரோனா வைரஸ் நோய் அதிகம் பாதித்து வரும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஐந்தாம் கட்ட ஊரடங்கை கடுமையாக பின்பற்ற உத்தரவிடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம். மற்ற மாவட்டங்களில் பொது போக்குவரத்துகளான பஸ், ரயில் பயணங்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.