தமிழகத்தில் ஜுன் 1 முதல் பேருந்துகள், கோயில்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? பரபர தகவல்
சென்னை: தமிழகத்தில் ஜூன் 1ம் தேதியில் இருந்து பேருந்து, கோயில்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.
மார்ச் 25ம் தேதி தொடங்கி மே 31 வரை ஊரடங்கு நான்கு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் 5வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற பரபரப்பு நிலவுகிறது.
ஒரே நாளில் கொரோனாவால் 12 பேர் மரணம்.. 11 சென்னையில் நடந்தது.. உயிரிழப்பின் ஷாக் பின்னணி
இ பாஸ் கட்டாயம்
பேருந்து போக்குவரத்துக்கு தடை, கோயில்கள் உள்பட வழிபாட்டு தலங்களை திறக்க தடை, சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு பாஸ் இல்லாமல் செல்ல தடை, தியேட்டர்களை திறக்க தடை, தங்கும் விடுதிகளை திறக்க தடை போன்றவை தற்போது பிரதான தடையாக உள்ளது. இதுதவிர விமான பயணத்திற்கு இபாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 7மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓரளவு இயல்பு நிலை
ஊரடங்கு 4முறை நீட்டிக்கப்பட்ட போதும், சில தளர்வுகளை அரசு கடந்த முறை அறிவித்தது. இதனால் ஓரளவு அலுவலங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் குறைந்த அளவு பணியாளர்களுடன் இயங்குகின்றன. பெரும்பாலான தனி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஓட்டல்கள் அனைத்தும் இப்போது இயங்குகின்றன.ஆனால் பார்சலுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. சென்னை தவிர பிறபகுதிகளில் சலூன்கடைகள் இயங்குகின்றன. பேருந்து போக்குவரத்தை தவிர பிற போக்குவரத்துகள் ஓரளவு இயல்பு நிலையை அடைந்துள்ளது. ஏசி இல்லாத எல்லா கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
ஜுன் 1ல் திறப்பா?
இந்த சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி கொடுத்துவிட்டு வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி கொடுக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே கடந்த வாரம் அறநிலைத்துறை அதிகாரிகள் கோயில்களை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தினர். இது தொடர்பான பரிந்துரை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்ன பரிந்துரை அளித்தார்கள் என்பது உறுதியாக தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் வரும் ஜூன் 1 முதல் கோயில்கள் உள்பட வழிபாட்டு தலங்களில் குறைந்த அளவு மக்கள் சென்று வழிபடும் வகையில் அனுமதி அளிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.
கால் டாக்ஸி அனுமதி
சென்னையில் கால்டாக்ஸி, ஆட்டோக்கள் குறைந்த பயணிகளுடன் இயக்க அனுமதிக்கப்படலாம் என்கிறார்கள். மேலும் தமிழகத்தில் குறைந்த அளவு பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதிஅளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி 20 முதல் 30 பயணிகள் மட்டுமே பேருந்துகளில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர நகரங்கள் மற்றும் வெளியூர்களுக்கு பேருந்துகளை குறைந்த அளவு இயக்க அனுமதிக்கப்படலாம் என்கிறார்கள். ஆனால் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்பது முதல்வரிடம் இன்று மாவட்ட கலெக்டர்கள் கொடுக்கும் அறிக்கையை பொறுத்தே இருக்கும் என்கிறார்கள். அதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இறுதி முடிவை நாளை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.