திங்கள் முதல் பேருந்துகள் இயக்கப்படுமா? எந்தந்த மாவட்டங்களில் பஸ் ஓடும்.. ஸ்டாலின் இன்று அறிவிப்பு?
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக பேருந்துகள் வரும் திங்கள் முதல் இயக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பேருந்துகள் இயக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த மே மாதம் 36 ஆயிரம் என்கிற அளவில் உயர்ந்து இருந்தது. இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்று பரவலை குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.
இன்னும் 6 முதல் 8 வாரம்தான்.. இந்தியாவில் கொரோனா 3வது அலை தாக்கும்.. எய்ம்ஸ் தலைவர் எச்சரிக்கை
இதன் படி மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவித்தார். அதன்பின்னர் கடந்த மே 24ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை இரண்டு வாரங்கள் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவித்தார்.
கடைகள் திறப்பு
தளர்வுகளற்ற ஊரடங்கால் மக்கள் வெளியில் சுற்றுவது குறைந்தது. இதனால் கொரோனா பாதிப்பும் படிப்படியாக குறைந்தது. இதனால் ஜூன் 7ம் தேதியில் இருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் மீன், இறைச்சி, ஹார்டுவேர் கடைகள், சலூன், டீக்கடை, செல்போன், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள் காலை 6மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பபட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி தரப்படவில்லை.
கோவை ஈரோடு
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கையால் தொற்று வெகுவாக குறைந்துவிட்டது. தினசரி பாதிப்பு 9 ஆயிரத்திற்கு கீழ்வந்துள்ளது. கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கு மேல் உள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துவிட்டது.
பேருந்துகள் இயக்கப்படுமா
இந்த பரபரப்பான சூழலில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ம் தேதி (திங்கள்கிழமை) காலையுடன் முடிகிறது. இதையொட்டி தமிழகத்தின் மேலும் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் பொதுபோக்குவரத்தை குறைந்த அளவில் (50 சதவீத இருக்கைகளுடன் அனுமதிப்பது) உள்ளிட்டவைகள் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று காலை 11மணிக்கு மேல் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஐஏஏஸ் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள் இந்த கூட்டத்தில் தளர்வுகக்ள் குறித்து ஆலோசித்து ஸ்டாலின் முடிவினை அறிவிக்க உள்ளார். தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுள் மட்டும் பேருந்துகள் இயக்க உத்தரவிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதிகாரிகள் தகவல்
இதனிடையே அரசு பேருந்துகளை இயக்க உத்தரவு பிறப்பித்தால், உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம். அனத்து பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளித்து தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறதாம். மேலும் அரசு பேருந்து டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போதைய நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அதிர்ச்சியில் இருக்கும் மக்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டால், பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.