ஜெ. அன்பழகன் மறைவு.. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்குமா?
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகன் நோய்த்தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்தார் அவருக்கு வயது 62. 2001, 2011, 2016 ஆகிய சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்று மூன்று முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர் அன்பழகன்.
அன்பழகன் மறைந்தபோது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்தார். தற்போது அவர் உயிரிழந்துள்ளதால் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதி காலியாக உள்ளது.
இந்த தகவலை இன்னும் சில நாட்களில் சட்டசபை செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்... பிறந்தநாளன்று உயிர்பிரிந்தது
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு இடைத் தேர்தல்
அவர் அறிவித்த பிறகு ஆறு மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறை. எனவே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறிய தகவல் இதுதான்.
2021 சட்டசபை தேர்தல் எப்போது?
தமிழகத்தின் 16வது சட்டசபை தேர்தல் 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பொதுத் தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்கள் கூட இல்லை. அதற்குள்ளாக ஒரு இடைத் தேர்தலை நடத்த வேண்டுமா என்று அனைத்து கட்சிகளுமே யோசிக்கும். ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு சட்டசபை தொகுதி காலியாக இருக்கக்கூடாது என்பதுதான் விதிமுறை என்றாலும்கூட, ஒரு வருடம் கூட நிறைவு பெறாத ஒரு எம்எல்ஏ பதவிக்காக தேர்தல் செலவினத்தில் ஈடுபட எந்த கட்சியும் தயாராக இருக்காது.
6 மாதங்களுக்கு பிறகு பொதுத் தேர்தல் ஆயத்தம்
சட்டசபை செயலாளர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ அன்பழகன் இறந்துவிட்டதாக கூறி அந்த சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக அறிவித்து, அதிகபட்சம் ஆறு மாதங்களான பிறகான காலகட்டத்தில், பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் என்பதுதான் யதார்த்தம்.
நடைமுறை இதுதான்
பொதுத் தேர்தலுக்கு குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்பே தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையம் வெளியிடும். அதன்பிறகு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். டிசம்பர் மாதம் வரை ஆறு மாத கெடு என்பது முடிந்து விடும். அதன் பிறகு ஜனவரி பிப்ரவரி மட்டும்தான் இருக்கிறது. மார்ச் மாதவாக்கில் பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டு விடும். நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். எனவே பிற கட்சிகள் வலியுறுத்தாத பட்சத்தில் இந்த இரண்டு மாத நெகிழ்வு தன்மையை பின்பற்றுவதில் பெரிய பிரச்சினை இருக்காது.
பொதுத் தேர்தல்தான்
இதற்கு மற்றொரு முக்கிய காரணம், கொரோனா வைரஸ் காரணமாக இப்போது பொது நிகழ்ச்சிகள் எதுவும் நடப்பதில்லை. எனவே தேர்தலும் கூட நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறைவு. இதையே காரணமாக வைத்து இந்த 6 மாதம் காலக்கெடு நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறாது. அடுத்த பொதுத் தேர்தல்தான் நடைபெறும். இவ்வாறு அவர்கள் அழுத்தம் திருத்தமாகக் கூறினர்.