திமுக கூட்டணியில் வரப்போகிறதா புதிய ட்விட்ஸ்ட்? குமுறும் காங். நிர்வாகிகள்!
சென்னை: புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்த சூழலில் தங்களை திமுக நிர்வாகிகள் மதிப்பதே இல்லை என்று புலம்பும் காங்கிரஸ் நிர்வாகிகள் கமலுடன் கூட்டணி சேரலாம் என்று கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் முதல்வர் வேட்பாளரை அறிவித்து திமுக தேர்தலை சந்திக்கும் முடிவுக்கு வந்திருப்பது அந்த மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே பெரிய அளவில் உறவில் விரிசல் விழுந்திருப்பதை காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறினார்கள்.
இந்த சூழலில் திமுக அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதால் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு போதிய இடம் ஒதுக்கப்பட வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. அத்துடன் மாவட்டங்களில் திமுகவினர் தங்களை மதிப்பத இல்லை என்று வேதனைப்படும் காங்கிரஸ் நிர்வாகிகள் திமுக அல்லாத பிறகட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கலாமே என்று காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது.
தனித்து போட்டி
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்கும் போது தான், புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் நடைபெறும் 2006 சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. 30 இடங்களை கொண்ட புதுச்சேரி சட்ட மன்றத்தில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது, தனித்து போட்டியிட்டால் மட்டுமே தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நோக்கத்தில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றி விட்டு தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
முதல்வர் வேட்பாளர்
அண்மையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனை முதல்வர் வேட்பாளராக திமுக களம் இறக்கியது. புதுவையில் நடந்த திமுக தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன் 30 தொகுதிகளையும் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைக்கும். அப்படி இல்லாவிட்டால் இந்த மேடையிலே எனது உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்று கூறினார். பின்னர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தபின்னர் நாங்கள் என்று தான் சொன்னேன் என்றும் தற்கொலை செய்து கொள்வதாக கூறவே இல்லை என்றும் அந்தர்பல்டி அடித்தார்.
காங்கிரஸ் அதிரடி
இதனிடையே முதல்வர் வேட்பாளரை அறிவித்ததால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸார் புதுச்சேரியில் தாங்களும் தனித்து போட்டியிட தயார் என்ற தெரிவித்தனர். இதனிடையே திருப்பூரில் ராகுலின் வருகைக்கான முன்னேற்பாடுகளை பார்வையிட்டு பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தேவைப்பட்டால் புதுவையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடவும் தயாராகவே இருப்பதாக கூறினார்.
கழட்டிவிட முயற்சி
அதேநேரம் காங்கிரஸ் - தி.மு.கவிடையே புதுச்சேரியை போல் தமிழகத்திலும் மோதல் தொடங்கியதாக தெரிகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட்டு திமுக போட்டியிட வேண்டும் என்று திமுகவில் கூறிவருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர் தி.மு.கவை கழற்றிவிட்டு இதர கட்சிகளுடன் இணைந்து போட்டியிட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
கமலுடன் கூட்டணி
அண்மையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்பி கார்த்தி சிதம்பரம், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரியும் கமலின் மக்கள் நீதி மையம் கூட்டணியில் சேர விரும்பினார் ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை என்றார். ஏனெனில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் கமல் வரலாம் என்ற ரீதியில் பதில் அளித்தாரா இல்லை எனப்து குறித்து தெரியவில்லை,
திமுக 200 தொகுதிகள்
தி.மு.க 200 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவித்து வரும் நிலையில், தொகுதி பங்கீட்டில் தங்களுக்கு போதிய இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறவு முறியும் தருவாயில் இருப்பதாக சொல்லப்படுகிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின் இதுபற்றி விளக்கம் அளித்தால், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வரும். இல்லாவிட்டால் இது பூதாகரம் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.