தினகரனுக்கு இருக்கும் கடைசி அஸ்திரம் 'ஸ்லீப்பர் செல்'... கைகொடுப்பார்களா?
Recommended Video
சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்க்க டிடிவி. தினகரன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. கடைசியாக தினகரன் கைவசம் இருக்கும் பிரம்மாஸ்திரம் அவர் தொடக்கம் முதலே சொல்லி வரும் ஸ்லீப்பர் செல்.
2017 பிப்ரவரி 16ல் அப்போதைய அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா தேர்வு செய்ததன் அடிப்படையில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக சசிகலா குடும்பம் கட்சியை காப்பாற்றுவதற்காக புத்திசாலித்தனமாக இந்த முடிவை எடுத்ததாக நினைத்தது.
ஆனால் அதற்குப் பின்னர் தான் எடப்பாடி பழனிசாமியின் உண்மையான ரூபம் வெளிவந்தது. சசிகலாவை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு கட்சியையும் ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சசிகலா குடும்பத்தை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
தினகரனின் தனிக்கட்சி
கடுப்பான சசிகலா தரப்பு ஓ.பிஎஸ், ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்ப்போம், கட்சியையும் சின்னத்தையும் மீட்போம் என்று கூறியது. தினகரன் முடிந்த வரை முட்டி மோதிப் பார்த்தும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரட்டை இலை சின்னத்தையும் அதிமுகவையும் மீட்டெடுக்க முடியவில்லை. வேறு வழியின்றி தினகரன் தனிக்கட்சியைத் தொடங்கி அதற்கு பொதுச் செயலாளராக சசிகலாவையும், துணைப் பொதுச்செயலாளராக தன்னையும் நியமித்துக் கொண்டார்.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை
தினகரனின் தனிக்கட்சி அறிவிப்பால் அதிருப்தியில் இருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஒருபக்கம் தனிக்கட்சியை தொடங்கி இருக்கிறார். அதிமுகவில் பிளவு, சசிகலா குடும்பத்தில் பிளவு என்று ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு பல விறுவிறுப்புகள் அரங்கேறின.
ஆளுநரிடம் தந்த மனு
முதலமைச்சர் எடப்பாடி அரசை கவிழ்க்க தனது ஆதரவாளர்களான 18 எம்எல்ஏக்களை அஸ்திரமாக பயன்படுத்தினார் தினகரன். ஆளுநரை சந்தித்து 18 எம்எல்ஏக்கள் எடப்பாடி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மனு அளித்தனர். 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
தீர்ப்பால் தகர்ந்த கோட்டை
அசராத தினகரன் தரப்பு 18 எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாகவே வரும் நம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு நேற்றைய தீர்ப்பு அவர்களின் மனதில் கட்டி வைத்திருந்த கோட்டையை தகர்த்தது. அடுத்தது என்ன செய்யலாம் மேல்முறையீடு செய்யலாமா அல்லது தேர்தலை சந்திக்கலாமா என்று யோசித்து வருகின்றனர்.
என்னாச்சு ஸ்லீப்பர் செல்
சசிகலாவிற்கு துரோகம் செய்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்படும் ஓ.பிஎஸ், ஈபிஎஸ் ஆட்சியை கவிழ்க்க தினகரன் எடுத்த முயற்சிகள் அனைத்தும் அவருக்கு தோல்வியையே தந்துள்ளன. இந்நிலையில் தினகரனுக்கு இருக்கும் கடைசி அஸ்திரம் அவர் தொடக்கம் முதலே சொல்லி வரும் ஸ்லீப்பர் செல். 18 எம்எல்ஏக்கள் நீக்கம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டாலும் எடப்பாடி அரசுக்கு ஆபத்து இல்லை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் அவர் பெரும்பான்மையை பெற்றுவிடும் நிலையே இருக்கிறது. இந்நிலையிலாவது தினகரன் சொல்லும் ஸ்லீப்பர் செல்கள் வெளிவந்தால் மட்டுமே தினகரன் ஆசைப்படும் ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கும். ஆனால் உண்மையிலேயே தினகரன் தரப்பு சொல்வது போல ஈபிஎஸ், ஓபிஎஸ் முகாமில் ஸ்லீப்பர் செல் இருக்கிறதா இல்லையா என்பது புரியாத புதிராகவே உள்ளது.