சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நினைச்சு கூட பார்க்க முடியல.. தேமுதிக எடுக்க போகும் "அந்த" முடிவு.. முடிவுரை எழுதப்படுகிறதா?

தேமுதிக வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: ஆவேசமாக அறிவித்து விட்டு, தனித்து போட்டியிடும் முடிவுக்கு தேமுதிக போனால்.. அதன் நிலை என்னாகும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

காரணம், தேமுதிக இடத்தை ஏற்கனவே மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக போன்றவை பிடித்து விட்டன. வலுவாக காலூன்றி நிற்கின்றன. எனவே மீண்டும் தேமுதிக தனித்து நடை போட தீர்மானித்தால் அதற்கு முதலில்அந்தக் கட்சிக்குத் தேவை விஜயகாந்த் என்ற ஒரிஜினல் பலம்.

ஒரிஜினல் பலத்தை இழந்துள்ள காரணத்தால்தான் இன்று தேமுதிக பலமிழந்து போய் நிற்கிறது. மேலும் அக்கட்சியின் 2ம் நிலைத் தலைவர்கள் என்று யாருமே இல்லாத காரணத்தாலும், பிரேமலதா, சுதீஷ் ஆகியோரின் செயல்பாடுகளால் கூட்டணிக் கட்சிகளே கடு்பபாக உள்ளதாலும தேமுதிகவின் நிலை மிகவும் கேலிக்குரியதாக மாறியுள்ளது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

தேமுதிகவை விஜயகாந்த் ஆரம்பித்தபோது இதுதான் புதிய மாற்று என்ற கருத்தே அதிகம் இருந்தது. இந்த எதிர்பார்ப்பைத்தான் அவர் வாக்குகளாக அறுவடை செய்தார். அது அவருக்கு மிகப் பெரிய எழுச்சியையும் ஏற்படுத்தியது. அதற்கேற்ப தனித்தே போட்டியிடுவேன் என்றுதிட்டவட்டமாக சொல்லி ஒவ்வொரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டார். இது மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

 நல்ல பெயர்

நல்ல பெயர்

ஆனால் அதே விஜயகாந்த், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தபோது அவர் சேர்த்து வைத்திருந்த அத்தனை நல்ல பெயரும், அவர் கட்டி வந்த நம்பிக்கை கோட்டையும் அப்படியே தகர்ந்து போனது. இன்று பாஜக செய்து வரும் அரசியல் உத்தியைத்தான் அன்று ஜெயலலிதா கடைப்பிடித்து தேமுதிகவை காலி செய்தார். உறவாடி பகை காட்டும் டெக்னிக்தான் அது. தேமுதிகவுடன் உறவு என்று உள்ளே இழுத்து அதை பலவீனமாக்கி அன்று காலி செய்தது இதே அதிமுகதான்.

 விஸ்வரூபம்

விஸ்வரூபம்

அன்று விழுந்ததுதான் தேமுதிக. அதன் பின்னர் விஜயகாந்த்தும் உடல் நலிவுற்று செயல்படாத நிலைக்குப் போய் விட்டார். அதன் பின்னர் தேமுதிகவால் ஒரு முறை கூட விஸ்வரூபம் காட்ட முடியவில்லை. விஸ்வரூபத்தை விட குறைந்தபட்ச ஆவேசத்தைக் கூட அந்தக் கட்சியால் காட்ட முடியாத நிலைதான். மேலும் மாறி மாறி திமுக, அதிமுகவுடன் பேச்சு நடத்தி நாங்களும் இதே குட்டையில் ஊறிய மட்டைதான் என்று தேமுதிகவே மக்களிடம் அம்பலப்பட்டுப் போய் நின்றதை மக்கள் கண்டார்கள்.

 தனித்து போட்டி

தனித்து போட்டி

இதுவரை மொத்தம் 7 சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை சந்தித்துள்ளது தேமுதிக. அதில் முதல் தேர்தலான 2006ம் ஆண்டு 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு விஜயகாந்த் மட்டும் வென்றார். அந்த தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் 27,64,223 ஆகும். அடுத்து வந்த 2009 லோக்சபா தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டது.

விஜயகாந்த்

விஜயகாந்த்

2009 லோக்சபா தேர்தலில் எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால், 31 லட்சத்து 26 ஆயிரத்து 117 வாக்குகளைப் பெற்று அனைவரையும் அதிர வைத்தார் விஜயகாந்த். இதுதான் அந்தக் கட்சிக்கு தமிழகத்தில் தனி இடம் கிடைக்க முக்கிய தேர்தலாக அமைந்தது. ஆனால் அதன் பிறகுதான் விஜயகாந்த் தடுமாறத் தொடங்கினார். கூட்டணிக்கு வருமாறு திமுக, அதிமுக என இரு கட்சிகளுமே தேமுதிகவை நோக்கி வலை வீசின.

தேமுதிக

தேமுதிக

2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக வீசிய வலையில் போய் விழுந்தார் விஜயகாந்த். கட்சியைக் காப்பாற்றவும், தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்றும் அப்போது அதற்கு காரணம் கூறப்பட்டது. அந்தத் தேர்தலில் தேமுதிகவுக்கு 29 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். மொத்தம் 41 சீட்களை அள்ளிக் கொடுத்திருந்தார் ஜெயலலிதா. அதை தங்களுக்கான அங்கீகாரமாக தேமுதிகவினர் நினைத்திருந்தனர். ஆனால் ஜெயலலிதா கணக்கு வேறு மாதிரி இருந்தது.

 கூட்டணி

கூட்டணி

கூட்டணிக்குள் இழுத்துப் போட்ட பின்னர் தேமுதிகவை வேட்டையாடினார் ஜெயலலிதா. குறுகிய காலத்திலேயே கூட்டணி முறிந்தது. தேமுதிகவை பிளந்தார் ஜெயலலிதா. மா பா பாண்டியராஜன் உள்ளிட்டோர் அப்போதுதான் அதிமுக பக்கம் தாவி வந்தார்கள். நிலை குலைந்து போய் நின்றார் விஜயகாந்த். ஜெயலலிதா வீசிய வலையில் தான் சிக்கியதை ரொம்ப தாமதமாகத்தான் உணர்ந்தார் விஜயகாந்த். ஆனால் அதற்குள் எல்லாம் எல்லை மீறிப் போயிருந்தது.

 இமேஜ்

இமேஜ்

2011 தேர்தலோடு தேமுதிகவின் சகாப்தம் முடிந்து போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மக்கள் மத்தியில் விஜயகாந்த்தின் இமேஜை காலி செய்து விட்டார் ஜெயலலிதா. விஜயகாந்த் மாற்று சக்தி அல்ல, அவரும் எங்களோடு சேர்ந்தவர்தான் என்று ஜெயலலிதா மறைமுகமாக மக்களுக்கு சொல்லிக் காட்டி விட்டார். அந்த அடியிலிருந்து விஜயகாந்த்தால் எழமுடியாமலேயே போய் விட்டது.

 சிக்கல்

சிக்கல்

அதன் பின்னர் வந்த 2014 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தார். ஆனால் இங்கும் தேமுதிகவுக்கு அடியே கிடைத்தது. 14 தொகுதிகளில் போட்டியிட்டு 20 லட்சத்து சொச்சம் வாக்குகலைப் பெற்றும் கூட ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. அதன் பிறகு தேமுதிகவின் நிலை மேலும் தேய்ந்து தேய் பிறையானது.

 அழைப்பு

அழைப்பு

2016 சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற கூட்டணிக்குள் போய் சிக்கிக் கொண்டார். கருணாநிதி விடுத்த பல அழைப்புகளை அவர் நிராகரித்து மீண்டும் தவறு செய்தார். இந்த முறை வாக்கு சரிந்து போனது. வெறும் 12 லட்சத்து 34 ஆயிரத்து 384 வாக்குகளை மட்டுமே பெற்றது தேமுதிக. ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை. இத்தனைக்கும் 104 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டிருந்தது.

 வாக்கு

வாக்கு

அதன் பிறகு வந்த 2019 லோக்சபா தேர்தலில் மேலும் மோசமானது நிலை. இப்போது 4 தொகுதிகளே கிடைத்தன. நாலிலும் தோல்வி. வெறும் 9 லட்சத்து சொச்சம் வாக்குகளே கிடைத்தது. விஜயகாந்த்தை மக்கள் முற்றிலுமாக கை விட்டு விட்டனர் என்பதையே இந்தத் தேர்தல் காட்டியது. விஜயகாந்த் நலிவுற்ற நிலையில் தேமுதிகவும் தேய்ந்து போய் விட்ட நிலையில் இன்று அதன் இடத்தை கமல்ஹாசனும், சீமானும், தினகரனும் பிடித்துள்ளனர் என்பதே எதார்த்தமாகும்.

கமல்

கமல்

கமல்ஹாசன் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளார். தமிழகத்தில் 3வது பெரிய சக்தியாக அவர் உருவெடுத்து வருவதை கடந்த லோக்சபா தேர்தல் வெளிக்காட்டியது. உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் தனது பலத்தைக் காட்டியிருந்தது. அதே போலத்தான் நாம் தமிழர் கட்சியும் தனது வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது. தினகரன் இன்னொரு புதிய சக்தியாக எழுந்து நிற்கிறார். இவர்களுக்கெல்லாம் வலுவான தலைவர்கள் உள்ளனர், கட்சிகளும் கட்டுக்கோப்பாக உள்ளது.

சுதீஷ்

சுதீஷ்

ஆனால் தேமுதிகவின் நிலை அப்படி இல்லை. அவர்களது ஒரே நட்சத்திரம் விஜயகாந்த் மட்டுமே. அவர் பலமிழந்து போய் உள்ளார். பிரேமலதா, சுதீஷ் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். விஜயகாந்த் மகனோ வாய்க்கு வந்தபடி கடுமையாக பேசுகிறார். மக்கள் மத்தியில் அவரை விஜயகாந்த்தின் வாரிசாக யாரும் பார்க்கவில்லை. மாறாக, முரட்டுத்தனம் கொண்ட ஒரு அரசியல்வாதியாகவே மக்கள் பார்ப்பார்கள். எனவே இவராலும் தேமுதிகவுககு பலம் கிடைக்கும் என்று சொல்வது கடினம்தான்.

கடைசி

கடைசி

இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் முடிவுக்குப் போனால், அக்கட்சிக்கு இந்த தேர்தலே கடைசி தேர்தலாக கூட இருக்கும் நிலை ஏற்பட்டு விடும் என்பதை எதார்த்தமாகும். பார்க்கலாம் என்ன செய்யப் போகிறார்கள் என்று.

English summary
Will DMDK contest alone without any alliance in TN Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X