"கொடுத்தா 41 கொடுங்க.. இல்லாட்டி ஆளை விடுங்க".. பிரேமலதா போட்ட போடு.. கப்சிப் அதிமுக!
தேமுதிகவுக்கு அதிமுக கூட்டணியில் எத்தனை சீட் வழங்கப்படும் என தெரியவில்லை
சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை சீட்கள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
Recommended Video
சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஒவ்வொரு கட்சிகளுக்கும் தங்களுக்கான சீட்கள், தொகுதி ஒதுக்கீடுகளில் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், இவ்வளவு காலம் அமைதியை கடைப்பிடித்து வந்த தேமுதிகவும் களத்தில் குதித்துவிட்டது.
கடந்த மாதத்தில், தேமுதிக 41 சீட் கேட்டிருப்பதாக செய்திகள் வந்தன.. இல்லையானால் தனித்து போட்டி என்று பிரேமலதா சொல்லி இருந்தார். அதற்கு பிறகு, கடந்த சில நாட்களாக தேமுதிகவின் கூட்டணியோ அல்லது சீட் பேரம் குறித்த செய்திகளோ வெளிவரவில்லை.. இந்நிலையில், கடந்த வாரம் பிரேமலதா பேசும்போதுதான், "இந்த நிமிஷம்வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்" என்றார்.. அப்போதுதான் கூட்டணி பற்றி உறுதியாக தெரியவந்தது..
தொகுதிகள்
அதேபோல, 3 நாட்களுக்கு முன்பு, சுதீஷ், மணப்பாறையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து அதிமுக -தேமுதிக இடையே இன்னும் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை... ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தேமுதிகவுக்கு கடந்த முறை அதாவது 2011-ல் வழங்கப்பட்டதை விட அதிக தொகுதிகள் வேண்டும் என்று அதிமுகவிடம் கேட்போம்... அதிலும் மணப்பாறை தொகுதியில் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.
விஜயகாந்த்
கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில், 29 இடங்களில் வெற்றி பெற்றதுடன் திமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு தேமுதிக எதிர்க்கட்சியாக உருவெடுத்ததும், விஜயகாந்த் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானதும் உண்மையே என்றாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது பெருவாரியாக அக்கட்சிக்கு இல்லை.
40 சீட்?
இதுவரை, 2006, 2011 ஆகிய 2 தேர்தல்களில் மட்டும்தான் தேமுதிக வெற்றிவாகையை சூடிய நிலையில், அடுத்தடுத்த தேர்தல்களில் அவ்வளவாக சோபிக்கவில்லை.. அதனால், 41 சீட் என்பது சந்தேகமே.. மற்றொன்று, அன்று விஜயகாந்த் உடல்நலத்துடன் இருந்தார்.. எல்லா இடங்களிலும் ஒற்றை மனிதராக பிரச்சாரத்தை கையில் எடுக்கவும்தான் வெற்றிகள் சாத்தியமானது..
பார்த்தசாரதி
இப்படிப்பட்டசூழலில் நேற்று, இன்னொரு செய்தி வெளியாகி உள்ளது.. 41 சீட் கொடுப்பவர்களுடன் மட்டுமே, கூட்டணி வைத்து கொள்வோம் என்று அக்கட்சியின் மாநில துணை செயலர் பார்த்தசாரதி கூறியுள்ளார்.. அதேபோல தனியாக நிற்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கிறார். பொதுக்குழு கூட்டி, யாருடன் கூட்டணி என்று முடிவு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தனித்து களமா?
அப்படியானால், பிரேமலதா அன்று சொன்னதுபோலவே, அதே 41 இடங்களில்தான் தேமுதிக உறுதியாக இருப்பதுபோல தெரிகிறது.. ஆனால், அதிமுக தரப்பில் அந்த அளவுக்கு சீட் ஒதுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.. அதிகபட்சமாக வருகிற தேர்தலில் 15 தொகுதிகளை அதிமுக தேமுதிகவுக்கு ஒதுக்கலாம் என்கின்றனர்... தேமுதிக 15 - 20-க்குள் சீட் தந்தால் ஏற்குமா? அல்லது தனித்து களம் காணுமா?